6 மணி நேரம் தாமதமான ரயில்... பெங்களூருவில் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ரயில் தாமதத்தின் காரணமாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத சம்பவம் நடந்துள்ளது.
வடக்கு கர்நாடகாவிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ஹம்பி விரைவு ரயில் காலை 7 மணிக்கு பெங்களூருவுக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அந்த ரயில் 2.30 மணி அளவில் பெங்களூருவை சென்றடைந்தது.
மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. 154 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியளவில் முடிந்தது.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு.. இன்று நடந்தது.. நாடு முழுவதும் 15.19 லட்சம் பேர் தேர்வெழுதினர்!
6 மணி நேரம் தாமதம்
தேர்வு எழுதும் மாணவர்கள் 1.30 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்குச் சென்றிருக்க வேண்டும். 1 நிமிடம் தாமதம் ஆனாலும், தேர்வு எழுத மையத்திற்குள் அனுமதிக்கபடுவதில்லை. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் ரயில் 6 மணி நேரம் தாமதமானதால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது.
உதவ வேண்டும்
மருத்துவப் படிப்பு கனவுடன் ரயிலில் பயணம் செய்த மாணவர்கள் பலர் ட்விட்டர் மூலம், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு புகார் அளித்தனர். ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. தேர்வு எழுத உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ரயில்வே விளக்கம்
இதுகுறித்து தெரிவித்த தெற்கு ரயில்வே அதிகாரி, முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் தாமதம் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. குண்டகல் பகுதியில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் காரணமாக ரயில் தாமதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு கோரிக்கை
இதுகுறித்து தெரிவித்த முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. அந்த மாணவர்கள் மீண்டும் நீட் எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும், உங்களது அமைச்சரவையில் உள்ளவர்கள் தவறு செய்துள்ளனர். அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மாணவர்கள் குழப்பம்
நீட் தேர்வுக்கு இரு தினங்களுக்கு முன்னதாக, மக்களவை தேர்தல்கள் மற்றும் பிற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் தேர்வு மையங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இந்த சம்பவம், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், ரயில் சேவை தாமதமாகும் என்ற அறிவிப்பும் தாமதமாக வந்ததால் மாணவர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.