4 நாள்.. பெங்களூரை அலறவிட்ட சிறுத்தை! 28 மணிநேரம் போராடி பிடித்த வனத்துறை -கடைசியில் உயிரே போச்சே
பெங்களூர்: பெங்களூரில் கடந்த சில நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை புலியை வனத்துறையினர் பிடித்துள்ளனர். இந்த முயற்சியில் புலி உயிரிழந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடகாவின் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் நடமாடி வந்த சிறுத்தைகள் தற்போது நகர் பகுதியிலும் சர்வ சாதாரணமாக உலவ தொடங்கியுள்ளன. இரு தினங்களுக்கு முன்னர் ஒயிட்பீல்டு கூட்லுகேட் பகுதியில் சிறுத்தை அசால்ட்டாக நடந்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை கண்டு அதிர்ந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்திருக்கின்றனர். தகவலின் பேரின் வனத்துறையினரும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் இறங்கினர்.

நேற்று மாலை சிறுத்தை முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அது கிருஷ்ணா ரெட்டி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கியிருந்தது. இதனை மயக்க ஊசி கொண்டு பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கால்நடை மருத்துவரின் முன்னிலையில் சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் மயக்கமடையாத சிறுத்தை கால்நடை மருத்துவர் கிரண் என்பவரையும், வனத்துறை அதிகாரி தன்ராஜ் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டது. இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக சிறுத்தையை பிடிக்கும் பணிகள் தற்காலிகமாக நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இன்று மீண்டும் இப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், ஹுன்சூரிலிருந்து சிறப்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டன. இந்த குழுவில் காட்டு விலங்குகளை சுட்டு பிடிப்பதெற்கென சிறப்பு பயிற்சி பெற்ற விரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வனத்துறை சிறுத்தை இருக்கும் இடங்களை முழுவதுமாக சுத்துப்போட்டது. பின்னர் சிறப்புக்குழு தனது வேட்டையை தொடங்கியது. இதில் சிறுத்தை குண்டு காயங்களுடன் பிடிக்கப்பட்டது.

அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க முயல்கையில், சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்துவிட்டது. சுமார் 28 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுத்தை சுட்டு பிடிக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "சிறுத்தையை பிடித்து பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் விட முடிவு செய்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக சிறுத்தை இறந்துவிட்டது. இந்த சிறுத்தை 2 அதிகாரிகளை தாக்கியிருந்தது. இதையடுத்து சுட்டு பிடிக்கவும் அனுமதி பெறப்பட்டு இருந்தது. இதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இருந்தது. மயக்கஊசி செலுத்தி சிறுத்தையை பிடிப்பது நோக்கமாக இருந்தது. இருப்பினும் குண்டு பாய்ந்து சிறுத்தை இறந்துவிட்டது" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications