கர்நாடக அரசின் பத்திரிகை விளம்பரங்களில் சாவர்க்கர்.. நேரு போட்டோ இல்லை.. வெடித்த சர்ச்சை!
பெங்களூரு: கர்நாடக அரசு சார்பில் நாளிதழ்களில் வெளியான முழு பக்க விளம்பரத்தில், சுதந்திர போராட்ட தலைவர்கள் பட்டியலில் நேரு இடம் பெறாததும் வினாயக் சவார்க்கருக்கு இடம் அளிக்கப்பட்டு இருப்பதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள், அமுதப்பெருவிழாவாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையில் என 3 நாட்கள் இல்லங்கள் தோறும் தேசியக்கொடியை ஏற்றியும், காட்சிப்படுத்தியும், இதை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார்.

கர்நாடக அரசு விளம்பரம்
இதன்படி நாடு முழுவதும் பரவலாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடிகளை ஏற்றி உள்ளனர். எங்கு பார்த்தாலும் மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப்பறப்பதை காண முடிந்தது. வாகனங்களில் கூட மூவர்ண கொடி பறப்பதை காண முடிகிறது. மத்திய அரசின் இந்த ஹர்கர் திரங்கா பிரசாரத்தை ஊக்குவிக்க பல்வேறு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று கர்நாடகா அரசு வெளியிட்ட ஒரு விளம்பரம் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

ஜவஹர்லால் நேரு படம் இல்லை
சுதந்திர போரட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தலைவர்களின் படத்துடன் கர்நாடக அரசு சார்பில் இன்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடபட்டது. இதில், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர், லாலா லஜிபதிராய், பால கங்காரத திலகர் உள்ளிட்ட்ட தலைவர்களின் படம் இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் படம் இடம் பெறவில்லை. அதேவேளையில் புரட்சியாளர் சாவர்க்கர் என்ற அடைமொழியுடன் வினாயக் சவார்க்கர் படம் இடம் பெற்றுள்ளது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

பாஜக விளக்கம்
கர்நாடகத்தில் ஆளும் பாஜக இது பற்றி அளித்த விளக்கத்தில், நேருவால்தான் இந்தியா இரண்டாக பிளவுபட்டதாகவும் அதன் காரணமாகவே அவரது படம் புறக்கணிக்கப்பட்டது. சர்தார் படேல் இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். இதனால், அவரது படம் சேர்க்கப்பட்டது. இதுபோலவே, ஜான்சி ராணி, காந்தி, சவார்க்கர் படமும் இடம்பெற்றிருந்தது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். ஆனால், அவர் நமது நாட்டை பிளவுபடுத்திவிட்டார்"என்று கூறப்பட்டது.ச்

காங்கிரஸ் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங் கார்கே, "நேருவை தொடர்ந்து தாக்கி பேசுவது பாஜகவுக்கு வாடிக்கையாகிவிட்டது. இந்தியாவில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் பா.ஜ.க நேருவை குற்றம் சாட்டுகிறது. ஆனால், பாஜகவில் நேருவுக்கு இணையான தலைவர்கள் இல்லை. எவ்வளவு களங்கம் ஏற்படுத்த முயன்றாலும், நேருவின் பாரம்பரியத்தை பாஜகவால் அகற்ற முடியாது" என்றார்.

சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அவமானம்
கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் உள்நோக்கம் கொண்ட செயல் இது என்று சாடியுள்ள கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், ''முதல்வர் பசவராஜ் பொம்மை பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில், "இந்திய ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் இது மிகப்பெரிய அவமானம். இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. பசவராஜ் பொம்மையை கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்குவதோடு நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கோரவேண்டும்" என்றார்.

கருத்து மோதல்
முன்னதாக இன்று காலை, பிரிவினை குறித்த ஒரு வீடியோவை மத்தியில் ஆளும் பாஜக ட்விட்டரில் வெளியிட்டு இருந்தது. அதில், பிரிவினைக்கு நேருவும் பாகிஸ்தான் நிறுவனர் முகம்மது அலி ஜின்னாவுமே காரணம் என்று விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை முன்வைத்து பாஜகவும் காங்கிரசும் காரசாரமாக கருத்து மோதலில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடி ஆகஸ்ட் 14 ஆம் தேதியை பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிப்பதன் உண்மையான நோக்கம் என்னவென்றால், தற்போது நடந்து வரும் அரசியல் போரில், துயர் நிறைந்த வரலாற்று சம்பவங்களை தனக்கு சாதகம் ஆக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே ஆகும்' என்று சாடியிருந்தார்.












Click it and Unblock the Notifications