காசு மட்டுமே வாழ்க்கையில்லை! பெங்களூரில்.. தனிமையை போக்க ஆட்டோ ஓட்டும் மைக்ரோசாஃப்ட் ஊழியர்
பெங்களூர்: கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பலர் தனிமையை அதிகம் எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கையில் பெங்களூரில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் தனிமையை தவிர்க்க ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்தியாவில் வேலையின்மை பிரச்னை ஒரு பக்கம் தீவிரமாக இருந்தாலும், பெரும் டெக் நிறுவனங்களில் குறைந்த ஆட்களை கொண்டு அதிக வேலைகளை பிழிந்து எடுக்கும் கொடுமையும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்று தொழிலாளர் சட்டம் சொல்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதை கண்டுக்கொள்வதில்லை. தோராயமாக 10 மணி நேரம் தொழிலாளர்களை வேலை வாங்குகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் 12 மணி நேரம் கூட உண்டு. ஆனால், ஊதியம் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்கள் இந்த கொடுமைக்கு இணங்கி போக வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவு தனிமை அதிகரிக்கிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால், பெரு நிறுவனங்கள் மனித தொழிலாளர்களை வேலை, வேலை என்று சொல்லி சமூகத்திலிருந்து முற்றிலுமாக பிரித்து வைத்துவிடுகிறது. இந்த தொழிலாளர்கள் அதிகம் தனிமையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
பல தொழிலாளர்கள் இந்த தனிமையிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள வித்தியாசமான வழிமுறைகள கடைப்பிடிக்கின்றனர். அப்படி ஒருவர்தான் பெங்களூரில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
அதாவது வெங்கடேஷ் குப்தா எனும் x தள பயனர், மைக்ரோசாஃப்ட் ஊழியர் ஒருவர் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை தனது x தளத்தில் பகிர்ந்துள்ள குப்தா, "தனது தனிமையை போக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 35 வயது சாப்ஃட்வேர் இன்ஜினியர் ஒருவர் கோராமங்கலாவில் ஆட்டோ ஓட்டுகிறார்" என்று குறிப்பிட்டு, அவரின் போட்டோவையும் பகிர்ந்திருக்கிறார்.
இந்த போட்டோவில் ஆட்டோ ஓட்டுநரின் முகம் தெரியவில்லை. இருப்பினும் அவர் ஹூடி வகை சட்டையை அணிந்திருப்பதும், அதில் 'மைக்ரோசாஃப்ட்' என அச்சிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. இந்த x போஸ்ட் குறித்து நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிலர் ஆட்டோ ஓட்டும் மைக்ரோசாஃப்ட் ஊழியர் குறித்து தங்களது கவலையை தெரிவித்திருக்கின்றனர்.
"தொழில்நுட்பம் வளரும்போது மனிதர்களுக்கு இடையேயான இடைவெளி குறைகிறது. இது மறைக்கப்பட்ட உண்மை" என்று அவர்கள் கூறியுள்ளனர். வேறு சிலர், "இத உண்மையில் நல்ல விஷயம். புதிய மனிதர்களை சந்திக்க கிடைத்த வாய்ப்பாக இது இருக்கும்" என்று கூறியுள்ளனர்.
வேறு சிலர், "நான் இதுபோன்ற செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். வெளிநாடுகளில் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் பலர், ஓய்வு நேரங்களில் கால் டாக்சிகளை ஓட்டுகிறார்கள். ஏனெனில் புதிய மனிதர்களுடனான சந்திப்பு இப்படித்தான் ஏற்படுகிறது. சமூகத்தின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை இதன் மூலம் உணரலாம். இப்படி ஓட்டுபவர்கள் காசுக்காக வேலை பார்ப்பதில்லை" என்று கூறியுள்ளனர்.
மனசை ரிலாக்ஸ் செய்ய என்னதான் ஆட்டோ ஓட்டினாலும், சிட்டியின் டிராஃபிக் எரிச்சலடைய வைக்கும். எனவே ஆட்டோ ஓட்டுவது தனிமையை போக்க சிறந்த தீர்வாக இருக்காது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications