தனியார் பள்ளியில் மகளுக்கு இலவச சீட் - சினிமா பாணியில் பெண்ணை சீரழித்த கொடூரன் கைது
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பிரபல பள்ளியில் படிக்க இடம் வாங்கித்தருவதாக கூறி குழந்தையின் அம்மாவை 5 நாட்கள் கட்டாயமாக பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: பிரபலமான தனியார் பள்ளியில் இலவசமாக படிக்க சீட் வாங்கித்தருவதாக கூறி 6 வயது சிறுமியின் அம்மாவை வீட்டு வேலை செய்ய வைத்து கொடுமை செய்ததோடு 5 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு கொடூரன். அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கிறான். அவனிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளனர்.
தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமே கட்டாய கல்வி உரிமை சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம்.
இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். ஒவ்வொரு பள்ளிகளிலும் 25 சதவிகித ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
தனியார் பள்ளியில் கல்வி
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தனது மகளும் பிரபல தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவர் ராமநகரத்தில் வசிக்கும் ஆனந்த் என்பவரை அணுகியுள்ளார். சமூக ஆர்வலர் போர்வையில் நல்லது செய்வதாக கூறிக்கொள்ளும் அந்த நபர் கன்னட ஸ்ரீ சங்கேதனா அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.
கணக்கு போட்ட நபர்
ஆறு வயது மகளுக்கு பிரபல பள்ளியில் சீட் வாங்கித்தரவேண்டும் என்று கேட்கவே, அந்த நபருக்குள் இருந்த சாத்தான் கணக்கு போட ஆரம்பித்தது. அந்த பெண்ணிடம் தனது வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று வரவழைத்தான். அதற்கும் அந்தப்பெண் சம்மதித்தார்.
கட்டாய பலாத்காரம்
பாத்திரம் துலக்குவது, வீடு கூட்டுவது, சமையல் செய்வது என அனைத்து வேலைகளையும் கஷ்டப்பட்டு செய்தார் காரணம் எல்லாம் மகளின் படிப்பிற்காகத்தான். ஆனாலும் விடாத அந்த கொடூரன், அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தினான். மறுத்த நிலையிலும் கட்டாயமாக பலாத்காரம் செய்து வீட்டிற்குள் அடைத்து வைத்தான்.
ஐந்து நாட்கள் கொடூரம்
அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினான் வெளியே சொன்னால் அந்த பெண்ணையும் குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியே பலாத்காரம் செய்தான். ஐந்து நாட்கள் இந்த கொடூரம் நீடித்தது.
தப்பி வந்த பெண்
காலையில் வீட்டு வேலை செய்வது மாலையில் அந்த கொடூரனின் உடல் பசிக்கு தீனியாவது என தண்டனை அனுபவித்த அவர் ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து தப்பி வந்தார். தனது வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். கொதித்து போன குடும்ப உறவினர்கள் ஆனந்த் செய்த கொடுமைகளை எல்லாம் போலீசில் புகார் அளித்து கண்ணீர் விட்டு அழுதார். புகாரின் பேரில் ஆனந்தை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தனியார் பள்ளி மோகம்
பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் தம்பியின் மருத்துவ படிப்பிற்காக சீட் கேட்டு ஒரு தொழிலதிபரை பார்க்கப் போன பெண்ணை பலாத்காரம் செய்வது போல சீன் வைத்திருப்பார்கள். கடைசியில் அந்தப்பெண் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவார். இப்போது தனியார் பள்ளியில்
எல்கேஜி சீட்டுக்காக சமூக ஆர்வலர் என்ற பெயரில் நடமாடும் நபரை பார்க்கப் போய் இப்போது தனது மானத்தை இழந்து நிற்கிறார் ஒரு பெண். இதுபோன்று சமூக ஆர்வலர்கள் போர்வையில் நடமாடுபவர்களின் முகமூடிகளை கிழித்தெறிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.