மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு அளிக்காதீர்கள்! விவசாயிகளுக்கு நடிகர் கிஷோர் வலியுறுத்தல்!
பெங்களூர்: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை தொடர்ந்து வருகின்றனர். அவர்கள் டெல்லிக்குள் நுழையாமல் தடுக்க காவல்துறையினரும், துணை ராணுவப்படையினரும் ஏராளமான தடுப்புகளை அமைத்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் என்று நடிகர் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டம், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்தது. தற்போது அதே அளவுக்கு வீரியமிக்க போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி டெல்லி நோக்கி பேரணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தடுக்க மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக அறிவித்த விவசாய சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிடுவதில் உறுதியாக இருக்கின்றனர். மறுபுறம் காவல்துறையினர் தரப்பில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளில் பல கட்ட தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள், சாலையில் ஆணிகளை பதித்தல், கண்டெய்னர் கொண்ட சாலையை அடைத்தல் என பல கட்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவளிப்பதை நிறுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு நடிகர் கிஷோர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
"ஜெய் ஜவான் ஜெய் கிசான்.. விளை பொருட்களுக்கு நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா?? ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலையை கொடுப்பேன் என்று கூறிய கபட அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் மறுபுறம் ஊடகங்களே விவசாயிகளை தேச துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன. இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்லுவது?
விவசாயிகளை தடுக்கும் நோக்கில் சாலைகள் தோண்டப்பட்டன, தடுப்புகள் எழுப்பப்பட்டன, தோட்டாக்களும், கண்ணீர் புகை குண்டுகளும் வீசி அனைத்தையும் இந்த மோடி அரசு செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாது அவர்களை தேச துரோகிகள் என்று விளிக்க தொடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும்.
ஆனால், அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்! நமது விவசாயிகள் தேசவிரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா??" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications