கண்களை தானம் செய்த சரோஜா தேவி.. பின்னணியில் முக்கிய காரணம்.. இறந்தும் கூட பூமியை பார்க்கப்போகிறார்!
பெங்களூர்: வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் நடிகை சரோஜா தேவி நேற்று பெங்களூரில் காலமானார். அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவர் தனது 2 கண்களையும் தானம் செய்துள்ளார். அவரது 2 கண்களும் தானமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மற்றவர்களுக்கு பொருத்தப்பட உள்ளது. இதற்கிடையே தான் தற்போது நடிகை சரோஜா தேவி கண்தானம் செய்ததன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. தமிழில் 1956ம் ஆண்டு வெளியான திருமணம் என்ற நடிகர் ஜெமினி கணேஷன் படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நடிகர் எம்ஜிஆர், சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது சிறந்த நடிப்பின் மூலமாக மக்களை ரசிகர்களாக பெற்றார். ‛கன்னடத்துக்கு பைங்கிளி' என்ற பெயருடன் அழைக்கப்பட்டார். சரோஜா தேவி பெங்களூர் மல்லேஸ்வரத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில் தான் அவர் தனது 87 வது வயதில் நேற்று காலமானார். வயது முதிர்வின்போது ஏற்படும் உடல் உபாதையால் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து இன்று அவரது உடல் அரசு மரியாதையும் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராம்நகர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பெங்களூரில் இருந்து ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா தாலுகா தசவரா கிராமத்தில் ஒக்கலிகா முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் சரோஜா தேவியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சரோஜா தேவி இறந்த பிறகு அவரது 2 கார்னியாக்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. இறப்பதற்கு முன்பாகவே நடிகை சரோஜா தேவி பெங்களூர் நாராயணா நேத்ராலயா என்ற கண் மருத்துவமனையில் தனது கண்களை தானம் செய்வதாக கூறியிருந்தார்.
இதையடுத்து அவரிடம் இருந்து 2 கண்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் இறந்தும் கூட மற்றவர்கள் மூலமாக சரோஜா தேவியின் கண்கள் இந்த பூமியை பார்க்க உள்ளது. சரோஜா தேவியின் இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இதுதொடர்பாக நாராயணா நேத்ராலயாவில் உள்ள டாக்டர் ராஜ்குமார் கண் வங்கியில் உள்ளவர்கள் கூறுகையில், ‛‛சில ஆண்டுகளுக்கு முன்பு சரோஜா தேவி மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவ பரிசோதனைக்கு வந்த அவர் கண்தானம் செய்வது தொடர்பான ஆசையை எங்களின் தலைவரிம் கூறினார்.
இதையடுத்து கண்தானத்துக்கான அட்டை வழங்கப்பட்டது. அவர் கண்தானம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. சரோஜா தேவியிடம் இருந்து கார்னியாக்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவரது 2 கார்னியாக்கள் நன்றாக உள்ளன. விரைவில் இது சம்பந்தப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட உள்ளது. இதன்மூலம் மற்றவர்களுக்கு பார்வை கிடைக்க உள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications