15 லட்சம் கி.மீ பயணம்.. ஆதித்யா எல்1-ல் இருக்கும் முக்கிய கருவி இதுதான்! இதுக்கு இவ்வளவு பவரா?
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் முதன் முதலில் அனுப்பப்படும் ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது. இதை திட்டமிடப்பட்ட இலக்கில் கொண்டு சேர்க்க எல்ஏஎம் எனும் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.
பூமியின் வானிலையை கணிப்பதை போல விண்வெளிக்கும் வானிலை இருக்கிறது. இந்த வானிலையில் ஏற்படும் சில மாற்றங்கள் பூமியை கடுமையாக பாதிக்கலாம். அதாவது பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ள சூரியன்தான் இந்தை விண்வெளி வானிலையை தீர்மானிக்கிறது. இதிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள், கதிர்வீச்சுகள், காந்த துகள்கள் ஆகியவை பூமியில் உள்ள மின்னணு பொருட்களை கடுமையாக பாதிக்கும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். அதேபோல இந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்தியா நீண்ட காலமாக திட்டமிட்டு வந்திருந்தது. அப்படி இந்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஆதித்யா எல்1 விண்கலம்.
இது இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படுகிறது. இதில் மொத்தம் 7 கருவிகள் இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப் (VELC)தான். இந்த கருவி ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதன்மையான கருவியாகும். ஒரு நாளை இது சுமார் 1,440 புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும். ஆதித்யா எல்1-ல் உள்ள மொத்த 7 கருவிகளில் நான்கு சூரியனில் இருந்து வரும் ஒளியைக் கவனிக்கும், மீதமுள்ள மூன்று பிளாஸ்மா மற்றும் காந்தப்புலங்களை அளவிடும்.
மொத்தமா 190 கி.கி எடைகொண்ட இந்த ஆதித்யா எல்1 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்த விஷயங்களை சேகரித்து பூமிக்கு அனுப்பும். இருப்பினும் 5 ஆண்டுகளுக்கு பின்னரும் இதனை மேலும் வேலை செய்ய வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சூரியனை ஆய்வு செய்ய பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்படுகிறது. இப்படி நிலை நிறுத்தப்படும் புள்ளி லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது.
அதாவது இந்த புள்ளியில் சூரியனின் ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும். எனவே இது திசை மாறி நகராமல் ஒரே இடத்தில் இருக்கும். இந்த புள்ளிக்கு ஆதித்யா எல்1 சென்று சேர சுமார் 127 நாட்கள் வரை ஆகும். சந்திரயான் 3 நிலவுக்கு அனுப்பப்பட்ட 'கவண்கல் எறிதல்' நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் ஆதித்யா எல்1 விண்கலமும் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட்டில் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் எரிபொருள் கணிசமாக சேமிக்கப்படுகிறது.
சந்திரயான் 3 திட்டத்தில் பிரக்யான் ரோவரை விண்ணில் கொண்டு செல்ல விக்ரம் லேண்டர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதித்யா எல்1 திட்டத்தில் இதற்கு திரவ அபோஜி மோட்டார் (எல்ஏஎம்) பயன்படுத்தப்படுகிறது. இது ரோவர், ஆர்பிட்டர் என்று தனியாக பிரியாமல் ஆதித்யா விண்கலத்துடன் இணைந்தே இருக்கும். சரியாக சொல்வதெனில் இந்த 15 லட்சம் கி.மீ தூரத்தை கடக்க இந்த எல்ஏஎம் மோட்டர்தான் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications