முதல் நாள் தீவிரவாதி கைது.. மறுநாளே வெடிகுண்டுகள் கண்டெடுப்பு.. பதற்றத்தில் பெங்களூர்
பெங்களூர்: பெங்களூர் அருகே ஜமாஅத்-உல்-முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, இங்கிருந்து சுமார் 50 கி.மீ தூரத்திலுள்ள ராமநகரில் இரண்டு வெடி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் அடுத்த தொட்டபள்ளாப்பூர் பகுதியை சேர்ந்த ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஹபிபுர் ரஹ்மான், கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின்பேரில்தான், இந்த குண்டுகள் ராம்நகரின், திப்பு நகர் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாலத்தின்கீழ் குண்டுகள்
ராமநகர் மாவட்டம், திப்புநகரிலுள்ள ஒரு பாலத்தின் கீழே இந்த குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் பல குண்டுகளும் அங்கே இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
பயிற்சி முகாம்கள்
முன்னதாக, என்ஐஏ வெளியிட்ட ஒரு அறிக்கையில், "ஹபிபுர் ரஹ்மான், மூத்த ஜேஎம்பி தலைவர் ஜாஹிதுல் இஸ்லாம் என்ற கவுசரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அவர் மேற்கு வங்கத்தில் உள்ள போல்பூரை சேர்ந்தவர். ஜேஎம்பி நடத்திய பல பயிற்சி முகாம்களில் அவர் கலந்து கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்
ஹபிபுர் ரஹ்மான், மேற்கு வங்க மாநிலம், பர்த்வானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர். மார்ச் 30, 2015ல், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஹபிபுர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய அரசு மற்றும் வங்கதேச அரசுகளுக்கு எதிராக போர் தொடுக்க ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் சதி செய்து வருவதாகவும், அதில் ஹபிபுர் ரஹ்மான் முக்கிய உறுப்பினர் என்றும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிக்கிய தீவிரவாதி
மேற்கு வங்க மாநிலத்தில் போலீஸ் கெடுபிடி அதிகரித்ததால், பெங்களூர் அருகேயுள்ள தொட்டபள்ளாப்புரா பகுதியில் வந்து பதுங்கியிருந்துள்ளார் ஹபிபுர். ஆனால், குண்டுகளையும் அவர் பதுக்கி வைத்திருந்தது தற்போது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.