பணிக்கு செல்லாமல் ஜீவனாம்சம் கேட்பதா? 6 மாதத்தில் வேலை தேட பெண்ணுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூர்: பெங்களூரில் விவாகரத்தான எம்டெக் படித்த பெண்ணுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவரது முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ‛‛எம்டெக் படித்து வேலைக்கு செல்ல தகுதி இருந்தும் ஜீவனாம்சம் கேட்பதை ஏற்க முடியாது. அடுத்த 6 மாதங்களுக்குள் வேலை தேடி கொள்ள வேண்டும். வேலை கிடைத்தவுடன் ஜீவனாம்சம் வழங்குவதை எதிர்த்து குடும்ப நல நீதிமன்றத்தை அணுகலாம்'' என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞரும், இளம்பெண்ணும் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்தனர். ஆனால் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்கள் பிரிந்தனர். 2 மாதத்தில் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாகரத்து கோரி பெங்களூர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. அதோடு அந்த இளைஞர் தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.58 ஆயிரம் சம்பாதிக்கிறார். இதனால் மாதந்தோறும் ரூ.5 ஆயிரத்தை ஜீவனாம்சமாக பெண்ணுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து அந்த இளைஞர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி லலிதா கன்னேகந்தி விசாரித்தார். அப்போது, மனுதாரர் சார்பில், ‛‛அந்த பெண் எம்டெக் பயோ டெக்னாலஜி படித்துள்ளார். திருமணமத்துக்கு முன்பு பெரிய நிறுவனத்தில் பணி செய்தார். இப்போது பணிக்கு செல்லவில்லை. அதேபோல் மனுதாரர் மனஅழுத்தத்தால் சரியாக பணிக்கு செல்ல முடியாமல் உள்ளார். இதனால் ஜீவனாம்சம் வழங்கும் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறினார்.
இதற்கு பெண்ணின் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மனுவை தள்ளுபடி செய்யும்படி கூறினார். இதையடுத்து ஆவணங்களைநீதிபதி லலிதா கன்னேகந்தி ஆய்வு செய்தார். அப்போது, ‛‛பெண்கள் கணவரை மட்டும் நம்பி இருக்க கூடாது. இந்த வழக்கில் எதிர் மனுதாரர் எம்டெக் பயோடெக்னாலஜி படித்துள்ளார். அவருக்கு வேலை செய்த அனுபவம் உள்ளது. வேலை செல்லும் தகுதியும் இருக்கிறது. இதனால் ஜீவனாம்சம் கேட்பதை ஏற்க முடியாது.
அடுத்த 6 மாதத்துக்குள் அவர் வேலை தேடி கொள்ள வேண்டும். அதுவரை ஜீவனாம்சமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 6 மாதத்தில் வேலை கிடைத்த பிறகு ஜீவனாம்சம் வழங்குவதை எதிர்த்து குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்று கொள்ளலாம்'' என்று அதிரடியாக உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications