முரண்டு பிடிக்கும் கர்நாடகா.. "காவிரி" தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம்.. டிகே சிவக்குமார் அறிவிப்பு
பெங்களூர்: காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய உரிய நீரை திறந்து விடாமல் முரண்டு பிடித்து வரும் நிலையில், வரும் 23 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் இருந்து தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்டகாலம் சட்ட போராட்டங்கள் நடந்தன. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது.

குறிப்பாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட வேண்டிய 57 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு முறையிட்டது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய 37 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
ஆனால் காவிரி மேலாண்மை ஆணையமோ 10 நாட்களுக்கு 10,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடகா முரண்டு பிடிக்கிறது. தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறப்பதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் கூறும் போது, கர்நாடகாவில் கடுமையான வறட்சி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டுக்காக காவிரி நீரை திறந்துவிட்டோம். ஆனால் காவிரி நீரை தொடர்ந்து திறந்துவிட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனப் பேசியிருந்தார்.
பாஜகவும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் வரும் 23 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்தக் அனைத்து கட்சி கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்வும் டிகே சிவக்குமார் தெரிவித்துளார்.
தமிழகத்திற்கு நீர் வழங்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறுவது உன்னிப்பாக தமிழகத்திலும் கவனிக்கப்படுகிறது. ஏற்கனவே தண்ணீர் திறந்து விடாமல் முரண்டு பிடிக்கும் கர்நாடகா தற்போது காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.












Click it and Unblock the Notifications