சிவப்பாவது, பச்சையாவது.. அனைத்து நகரங்களிலும் ஆரம்பித்த அமேசான், பிளிப்கார்ட் சப்ளை.. எல்லாமே உண்டு
பெங்களூர்: நான்காவது கட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பல தளர்வுகள் கொடுக்கப்பட்டதன் காரணமாக, சிவப்பு மண்டலப் பகுதிகளிலும் அத்தியாவசியமற்ற பொருட்களை சப்ளை செய்யும் பணியை இன்று முதல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் துவங்கியுள்ளன.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் உட்பட நாட்டின் பெரும்பான்மையான பெருநகரங்கள் சிவப்பு பட்டியலில்தான் உள்ளன. ஆனால் மூன்றாவது கட்ட லாகடவுன் அறிவிப்பின்போது, அத்தியாவசியமற்ற பொருட்களை, சிவப்பு மண்டல பகுதிகளில் விற்பனை செய்வதற்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேநேரம் ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டல பகுதிகளில் அனைத்து வகை பொருட்களையும் ஆன்லைன் நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது.

4வது கட்ட ஊரடங்கு
இந்த அனுமதி கிடைத்த போதிலும், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பெரிதாக எந்த நன்மையும் ஏற்படவில்லை. எனவே அவை அத்தியாவசிய பொருட்களை சிவப்பு மண்டல பகுதிகளிலும் விநியோகிக்க உரிமை வழங்க கேட்டுக் கொண்டபடி இருந்தன. இந்த நிலையில்தான் இன்று 4வது கட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆர்டர்கள் ஆரம்பம்
இதில் கண்டைன்மெண்ட் பகுதிகளை தவிர்த்து, சிவப்பு மண்டல பகுதிகள் அல்லது பிற எந்த ஒரு பகுதிகளிலும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களையும் விற்பனை செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து உடனடியாக இன்று முதல் அனைத்து நகரங்களில் இருந்தும் ஆர்டர்கள் பெறத் தொடங்கியுள்ளன அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள்.

சிறு குறு நிறுவனங்களுக்கு நல்லது
இது தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனம் கூறுகையில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், ஆன்லைன் சப்ளை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுபோல பொருட்களின் சப்ளைக்கு அனுமதி கிடைத்துள்ளதால், இனிமேல் சிறு குறு நிறுவனங்களின் தொழில் உற்பத்தி அதிகரிக்கும். இது வரவேற்கத்தக்க முடிவு என்று தெரிவித்துள்ளது.

மின்னணு உபகரணங்கள்
இதேபோன்று அமேசான் நிறுவனம் அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளது. இதுவரை செல்போன் உடைந்தால் கூட வேறு மாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வந்த மக்களுக்கு, இப்போது இந்த லாக் டவுன் தளர்வு என்பது பலன் அளிக்கக்கூடியதாக மாறியுள்ளது. செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மக்கள் அதிகம் ஆர்டர் செய்ய தொடங்கியுள்ளனர். இருப்பினும் இ-காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் முக கவசம் அணிந்து கையில் சானிடைசர் பயன்படுத்தி, இடைவெளிவிட்டு பொருட்களை சப்ளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களே எச்சரிக்கை
மக்களும் கிடைக்கப்படும் பொருட்களை உடனடியாக பயன்படுத்தாமல், அவற்றை சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, பொருட்களின் மேல் போடப்படும் பாலத்தீன் உரைகளை, கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். அது உரிய முறையில் அகற்றப்பட வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications