அமித்ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது.. அம்பேத்கர் விவகாரத்தில் விளாசிய கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே
பெங்களூர்: அண்ணல் அம்பேத்கரை விமர்சித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது என கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. மேலும் கடவுள் பெயரை உச்சரிக்காமல் அம்பேத்கர் பெயரை உச்சரித்தால் சமூக, அரசியல் சமத்துவம் உருவாகும் என்றும் பிரியங் கார்கே, அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்ற போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என கோஷம் போடுவது பேஷனாகிவிட்டது; அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக கடவுள் நாமத்தை உச்சரித்தால் சொர்க்கத்துக்கு செல்லலாம் என பேசியிருந்தார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லியில் நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடக்கினர். நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷா ராஜினாமா கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிராக பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தியதால் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாட்டில் திமுக, இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே கூறுகையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது; அதனால்தான் அம்பேத்கர் குறித்து விமர்சித்துள்ளார். கடவுளின் பெயரை உச்சரித்தாலே சொர்க்கம் எப்படி கிடைக்கும் என தெரியவில்லை; ஆனால் அம்பேத்கர் பெயரை உச்சரித்தால் சமூக, அரசியல், பொருளாதார துறைகளில் சமத்துவம் கிடைக்கும் என்றார். மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த பிரியங் கார்கேவின் இந்த விமர்சனத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications