கர்நாடகா முதல்வர் யார்? சித்தராமையா, டிகே சிவக்குமாருக்கு போட்டியாக வந்த இன்னொரு தலை.. போராட்டம்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த முதல்வர் யார்? என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. முதல்வர் பதவியை எட்டிப்பிடிக்க சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் 3வதாக ஒரு தலைவரின் பெயர் ரேஸில் இணைந்துள்ளதோடு, அவரது ஆதரவாளர்கள் கர்நாடகாவில் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனி மெஜாரிட்டியை பெற்றுள்ளது. தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என பல கருத்து கணிப்புகள் தெரிவித்தன. அதனை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

தேர்தலை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக தான் பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி மக்களை கவர்ந்து பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த தேர்தலில் பாஜக பெரிய அளவில் சறுக்கலை சந்தித்தது. மொத்தம் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. ஜேடிஎஸ் 19, மற்றவர்கள் 4 தொகுதிகளில் வென்றன.
இந்நிலையில் தான் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழு்துள்ளது. முதல்வர் பதவி மீது கண்வைத்து சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் காய்நகர்த்தி வருகின்றனர். இருவரும் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் மேலிடதலைவர்களை சந்தித்து லாபி நடத்தி வருகின்றனர். இவர்கள் 2 பேரில் ஒருவருக்கு தான் முதல்வர் பதவி வழங்கப்படும் என கூறப்படும் நிலையில் புதிதாக ஒரு தலைவர் ரேஸில் இணைந்துள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை. கர்நாடகா மாநில முன்னாள் தலைவரும், மாஜி துணை முதல்வருமான பரமேஸ்வர் தான். இவர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சி முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கர்நாடகாவில் இருந்து வருகிறது. பரமேஸ்வர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் தான் அவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இன்று பரமேஸ்வரின் ஆதரவாளர்கள் துமகூரில் போராட்டத்தை நடத்தினர். கையில் பரமேஸ்வரின் போட்டோக்கள் அடங்கிய பதாகைகளை உயர்த்தி அவர்கள் போராட்டம் செய்தனர். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர்களில் பரமேஸ்வரின் பங்கு முக்கியமானது. இதனால் அவருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே இதுபற்றி பரமேஸ்வரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பரமேஸ்வர், ‛‛நான் காங்கிரஸ் தலைவராக 8 ஆண்டுகள் இருந்துள்ளேன். 2013 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தேன். அதன்பிறகு துணை முதல்வராக செயல்பட்டுள்ளேன். நான் தலைவராக இருந்த காலத்தில் கட்சி வேகமாக வளர்ந்தது. இப்போது முதல்வர் பதவி கேட்கமாட்டேன். தந்தால் மகிழ்ச்சி. தாராளமாக ஆட்சியை வழிநடத்துவேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications