மோடியிடம் இல்லாததா.. சொகுசு விமானத்தை பற்றி யார் பேசுவது? கர்நாடகாவில் சித்தராமையா - பாஜக பஞ்சாயத்து
பெங்களூர்: நாங்கள் சொகுசு விமானத்தில் பறப்பதாக பாஜக வாய்க்கு வந்ததை பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும், பிரதமர் மோடி சொகுசு விமானத்தில் தனி நபராக சுற்றுகிறார். அதுபற்றி பாஜக பேசுவதே இல்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக சித்தராமையா பதவி வகித்து வருகிறார். கர்நாடகவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சித்தராமையா, அமைச்சர் ஜமீர் அகமதுகான், கிருஷ்ணபைரே கவுடா ஆகியோர் டெல்லிக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

டெல்லியில் இருந்து கர்நாடாகா திரும்பும் போது ஜெட் விமானத்தில் பெங்களூருவுக்கு திரும்பி இருந்தார்கள். சொகுசு விமானத்தில் பயணம் செய்யும் புகைப்படம், வீடியோவை அமைச்சர் ஜமீர் அகமதுகான் வெளியிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. தற்போது இதை கையில் எடுத்த பாஜக, கர்நாடக மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவும் சந்தர்ப்பத்தில் முதல்வரும் அமைச்சர்களும் சொகுசு விமானத்தில் பறப்பதா? என விமர்சித்து இருந்தது.
இது குறித்து சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த சித்தரமையா கூறியதாவது:- நாங்கள் சொகுசு விமானத்தில் பறப்பதாக பாஜக வாய்க்கு வந்ததை பேசுகிறது. இதனை முதலில் பாஜக நிறுத்த வேண்டும். பிரதமர் மோடி சொகுசு விமானத்தில் தனி நபராக சுற்றுகிறார். அதுபற்றி பாஜக பேசுவதை இல்லை. அதுபற்றி பேசாமல் இருப்பது ஏன்?" என்றார்.
மேலும் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் குறித்து பேசிய சித்தராமையா, "மல்லிகார்ஜுன கார்கே தான் கூட்டணி கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்பது இன்னும் முடிவாகவில்லை. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தான், அவரது பெயரை முன் மொழிந்துள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும், அதனை வரவேற்கிறேன்.
டெல்லி சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி இருந்தேன். மாநிலத்தில் வறட்சியால் பல தாலுகாக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், வறட்சி நிவாரண நிதி வழங்கும்படி பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரதமரும், அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். கர்நாடகத்திற்கான வறட்சி நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications