ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய நபர்.. விழிவிடாமல் குறுக்கே சென்ற ஆட்டோ டிரைவர்.. பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்சில் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக ஊழியர்கள் கோரிக்கை வைத்த போதும் கூட கல் நெஞ்சம் கொண்ட ஆட்டோ டிரைவர், ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்ற காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் ஆட்டோ டிரைவர், ஆட்டோவை ஓட்டிச்சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. மனித நேயம் மரித்துப்போனதா என நெட்டிசன்கள் பலரும் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஹர்லூர் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆபத்தான நிலையில் நோயாளி இருந்ததால் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் பயணித்து கொண்டு இருந்தது. அப்போது ஆம்புலன்ஸுக்கு முன்னே சென்ற ஆட்டோ ஒன்று வழிவிடாமல் குறுக்கே சென்று கொண்டிருந்தது.
ஆம்புலன்ஸ் டிரைவர் ஹார்ன் அடித்தும் வழிவிட்டதாக தெரியவில்லை. இதனால் அம்புலன்சில் இருந்த ஊழியர்கள் ஆட்டோ டிரைவிரிடம் வழி விடுமாறு கூறினர். தொடர்ந்து வழி விடாமல் ஆட்டோ டிரைவர் சென்றதால் ஒரு கட்டத்தில், ஆம்புலன்ஸ் ஊழியர் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து வழி விடாமல் சென்றால் புகாரளிப்போம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்தும் கூட ஆட்டோ டிரைவர் வழிவிட்டதாக தெரியவில்லை.
இதனால், மற்றொரு ஊழியர் உருக்கமாகவும் வேண்டுகோள் விடுத்தார். அவசரத்தை புரிந்து கொண்டு தயவு செய்து எங்களுக்கு வழிவிடுங்கள் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கேட்ட போதும், இரக்கம் காட்டாத ஆட்டோ டிரைவர் ஆம்புலன்ஸுக்கு குறுக்கே ஓட்டிச்சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்து கொதித்த நெட்டிசன்கள், "ஆட்டோவின் எண்ணை குறிப்பிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்". நெட்டிசன் ஒருவர் கூறுகையில், 'KA-03-AD-6342 - என்ற எண் கொண்ட ஆட்டோ ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்று கொண்டிருக்கிறது. உரிய நடவடிக்கையை போக்குவரத்து காவல்துறை எடுக்க வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.
அதேபோல மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'உயிருக்கு ஆபத்தான நேரத்தில் செல்லும் ஒருவரை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸுக்கு கூட வழி விட மறுப்பது என்ன மாதிரியான மன நிலை. இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
கேரள சம்பவம்:
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளா மாநிலம் கண்ணூர் அருகே மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியை உறவினர்கள் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். தலச்சேரி மருத்துவமனைக்கு நோயாளி கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் முன்னால் ஒரு கார் சென்று கொண்டே இருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் டிரைவரால் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு செல்ல சுமார் அரை மணிநேர காலதாமதம் ஏற்பட்டதால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடைபெற்றது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications