ராமர் கோவில் திறப்பு: கர்நாடகாவில் 'குஜராத் மத வன்முறை'யை அரங்கேற்ற பயங்கர சதி.. காங். தலைவர் பகீர்!
பெங்களூர்: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது கர்நாடகாவில் 'கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்' போல வன்முறைக்கு பயங்கர சதித் திட்டம் தீட்டப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.எல்.சி.யுமான பிகே ஹரிபிரசாத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2002-ல் குஜராத்தில் கரசேவகர்கள் அயோத்தி சென்று திரும்பும் போதுதான் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் குஜராத் மதவன்முறைகளும் வெடித்தன.

கர்நாடகாவில் மதவன்முறைக்கு சதி: கர்நாடகாவிலும் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு உள்ளிட்ட சதித் திட்டத்தை நிறைவேற்றத்தை சிலர் திட்டமிட்டு வருகின்றனர். கர்நாடகாவில், குஜராத் வன்முறை சம்பவங்களைப் போல எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்க மாநில அரசு அனுமதித்துவிடக் கூடாது. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்பவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் எந்தவித சர்ச்சையும் இல்லாமல் மாநில அரசு செய்து தர வேண்டும்.
பாஜக சதி ஆலோசனை: குஜராத்தில் கோரா ரயில் எரிப்பு சம்பவம், அதைத் தொடர்ந்த வன்முறைகளை நிகழ்த்துவதற்கான சதித் திட்டத்தில் சில பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. சில அமைப்புகளின் தலைவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்து இத்தகைய வன்முறைகள் தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி இருக்கின்றனர். யார் எங்கே ஆலோசனை நடத்தினார்கள் என்பதையெல்லாம் பகிரங்கமாக சொல்ல முடியாது. அவர்கள் இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ராமர் கோவில் திறப்பு: அயோத்தி ராமர் கோவிலை மதத் தலைவர்கள், குருமார்கள் திறந்து வைத்தால் நாம் அனைவருமே அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லலாம். இந்து மதத்தின் தலைவர்களாக 4 சங்கராச்சாரியார்கள் குறிப்பிடப்படுகின்றனர். இந்த 4 சங்கராச்சாரியார்கள், அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைத்தால் பரவாயில்லை. ஆனால் அரசியல் தலைவர்களான மோடியும் அமித்ஷாவும் திறந்து வைக்க இருக்கின்றனர். இதனால் இது அப்பட்டமான அரசியல் நிகழ்வுதான். அமித்ஷாவும் மோடியும் தர்ம குருக்கள் அல்ல. அதனால்தான் ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வை நாங்கள் அரசியல் நிகழ்வு என்கிறோம்.
உப்பள்ளி கைது: கர்நாடகாவின் உப்பள்ளியில் கைது செய்யப்பட்ட முன்னாள் கரசேவகர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கரசேவகர் என்பதாலேயே குற்ற வழக்குகளில் அவரை கைது செய்யக் கூடாது என எப்படி சொல்ல முடியும்? இன்னமும் சொன்னால் 31 ஆண்டுகளாக அந்த கரசேவகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுதான் தவறு. இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதென்ன கோத்ரா சம்பவம்: 2002-ம் ஆண்டு அயோத்தியில் இருந்து கரசேவகர்கள் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குஜராத்தின் கோத்ராவில் கரசேவகர்களுடன் ரயில் தீயில் எரிந்து கருகியது. கரசேவகர்களை முஸ்லிம்கள் தீ வைத்து எரித்து கொன்றதாக தகவல் பரவ, குஜராத் முழுவதும் மிக மோசமான மதவன்முறைகள் வெடித்தன. இந்த வன்முறைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். குஜராத் மதவன்முறைகள் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி.












Click it and Unblock the Notifications