பெங்களூர் டிராபிக்கை குறைக்க எங்க ஆபீஸ் ரோட்டை தர முடியாது.. சித்தராமையாவிற்கு விப்ரோ நிறுவனர் பதில்
பெங்களூர்: பெங்களூர் அவுட்டர் ரிங் ரோடு (ORR) பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ (Wipro Campus) கேம்பஸின் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் கோரிக்கையை, விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜி நிராகரித்துள்ளார்.
"சர்ஜாபூர் கேம்பஸ் தனியார் சொத்து; அது சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) கீழ் செயல்படும் இடம் என்பதால், சட்ட ரீதியாகவும், ஒப்பந்த ரீதியாகவும், பொதுமக்கள் நுழைய அனுமதி அளிப்பது சாத்தியமில்லை," என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விப்ரோ இடத்தின் வழியே வாகனங்கள் செல்வதால் பிரச்சனைக்கு நீடித்த தீர்வு கிடைக்காது என்றும், அரசு மற்றும் நிபுணர்களுடன் இணைந்து அறிவியல், தரவுத்தள அடிப்படையிலான முழுமையான போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
அதேநேரம் முதல்வர் கேட்ட பிறகும் இல்லை என முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிட முடியாது அல்லவா. எனவே, விப்ரோ நிறுவனம், இந்த ஆய்வுக்கான செலவில் ஒரு முக்கியமான பங்கை ஏற்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார் அசீம் பிரேம்ஜி. நகரின் போக்குவரத்து சிக்கல்களுக்கு பேக்கேஜ் தீர்வுகள் உருவாக்க வேண்டும் என்றும் பிரேம்ஜி வலியுறுத்தியுள்ளார்.
"பெங்களூரு ORR பகுதி, இந்தியாவின் ஏற்றுமதி மையமாகவும், உலகத் தரத்திலான ஐடி சேவைகள் வழங்கும் மையமாகவும் விளங்குகிறது. எனவே போக்குவரத்து பிரச்சனைக்கு ஒரே தீர்வு கிடையாது; பல்வேறு கோணங்களில் அணுகும் பொழுதே நிலையான முடிவுகள் கிடைக்கும்," என்று அவர் அறிவுரை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications