பஜ்ரங் தள நிர்வாகி கொலை.. கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு.. பதற்றத்தில் கர்நாடகா!
பெங்களூர்: பஜ்ரங தள நிர்வாகி கொலையை கண்டித்து நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு நிறைய வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த நிர்வாகி ஹர்ஷாவை(26) 4 பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு கொலை செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
சீகேஹட்டி என்ற பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஷிமோகாவில் வன்முறை வெடித்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு
அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக சிமோகா மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த ஷிமோகாவில் நடந்த வன்முறையில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீவைத்துக் கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசினர்.

முதல்வர் பொம்மை
இந்த வன்முறை குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். பஜ்ரங் தள நிர்வாகி கொலையில் தொடர்புடையவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். அது போல் கர்நாடகா உள்துறை அமைச்சர் அராக ஞானேந்திரா கூறுகையில் ஹிஜாப் விவகாரத்துக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசாரணை அறிக்கை வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றார்.

காங்கிரஸை குற்றம்சாட்டிய பாஜக
கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில் பஜ்ரங் தள நிர்வாகி கொலையில் முஸ்லீம் குண்டர்கள் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும் முஸ்லீம் குண்டர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார் தூண்டிவிடுகிறார் என்றார். இதை சிவக்குமார் மறுத்துள்ளார். அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிவு செய்து அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

கூடுதல் போலீஸார்
அவர் தேசத்திற்கும் தேசியக் கொடிக்கும் அவமானத்தை கொடுத்துவிட்டார் என காங்கிரஸ் சிவக்குமார் குற்றம்சாட்டினார். பஜ்ரங் தள நிர்வாகி கொலை தொடர்பாக ஷிமோகா பகுதியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். உள்ளூர் போலீஸாருக்கு உதவி செய்ய 212 இன்ஸ்பெக்டர்களும் , சப் இன்ஸ்பெக்டர்களும் ஷிமோகா விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications