பயங்கர ரவுடி 'சைலண்ட்' சுனிலுடன்.. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக எம்பிக்கள்! பெங்களூரில் அதிர்ச்சி
பெங்களூர்: பெங்களூரில் பயங்கர ரவுடியாக வலம் வரும் 'சைலண்ட்' சுனில் என்பவருடன் பாஜக எம்.பி.க்கள் இருவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கு ஒன்றில் போலீஸாரால் ரவுடி 'சைலண்ட்' சுனில் தேடப்பட்டு வரும் நிலையில், பாஜக எம்.பி.க்களுடன் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கடும் விமர்சனத்துக்கு வித்திட்டுள்ளது.
இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், எதிர்காலத்தில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட பாஜகவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கேலி செய்துள்ளது.
பக்காபிளான்.. குஜராத் தேர்தலுக்கு ‛ஒன்டே’ தான் இருக்கு.. ஆம்ஆத்மி வேட்பாளர்களை தட்டித்தூக்கும் பாஜக!
பெங்களூரை மிரட்டும் பயங்கர ரவுடி
பெங்களூரில் உள்ள சாம்ராஜ்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (40). பயங்கர ரவுடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து ஆகிய வழக்குகள் உள்ளன. பல அரசியல் கட்சித் தலைவர்களின் ஆதரவு இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரில் பெயர்போன ரவுடியாக சுனில் வலம் வருகிறார். எத்தனை சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும், சுனில் எளிதில் கட்டப்பஞ்சாயத்து செய்து விடுவார் எனக் கூறப்படுகிறது. சுனில் வந்து நின்றாலே எதிர் தரப்பினர் அமைதியாகி விடுவார்களாம். இதனால்தான் இவருக்கு 'சைலண்ட்' சுனில் என்ற அடைமொழி வந்தது.
ரவுடியுடன் பாஜக எம்.பி.க்கள்
இதனிடையே, கொலை வழக்கு ஒன்றில் 'சைலண்ட்' சுனிலை பெங்களூர் போலீஸார் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தேடி வந்தனர். ஆனால் அவர் பிடிப்படவில்லை. இந்நிலையில், சாம்ராஜ்பேட்டில் நேற்று தனியார் அமைப்பு சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் பாஜக எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பி.சி. மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சைலண்ட் சுனில் மேடை ஏறினார். அவரிடம் எம்.பி.க்கள் இருவரும் நலம் விசாரித்துவிட்டு சிறிது நேரம் பேசினர். பின்னர் நிகழ்ச்சி நிறைவடைந்ததும் எம்.பி.க்கள் சென்றுவிட்டனர்.
கைது செய்யாதது ஏன்?
இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களும், வீடியோக்களும் நேற்று பெங்களூர் மட்டுமல்லாமல் கர்நாடகா முழுவதும் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பயங்கர ரவுடி ஒருவருடன் வெளிப்படையாக பாஜக எம்.பி.க்கள் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டதற்கு பெங்களூர் மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், 5 மாதங்களாக தலைமறைவாகி இருந்த சைலண்ட் சுனில், போலீஸார் முன்னிலையில்தான் 3 மணிநேரம் இருந்தார். ஆனால் போலீஸார் கைது செய்யாதது ஏன்? என்றும் பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ரவுடி சைலண்ட் ரவி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
"தாவூத் விரைவில் இணைவார்" - காங்., கிண்டல்
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சைலண்ட் சுனிலை பாஜக எம்.பி.க்களுடன் பார்த்தும் போலீஸாரும் சைலண்ட் ஆகிவிட்டார்கள். பாஜக என்றால் சும்மாவா? ஒருகாலத்தில், ஒயிட் காலர் ரவுடிகள்தான் பாஜகவில் இருந்தார்கள். இப்போது உண்மையான ரவுடிகளே பாஜகவில் இணைய தொடங்கிவிட்டார்கள். கூடிய விரைவில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும் பாஜகவில் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி இணைந்தால், அவர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்படும். யார் கண்டார்கள்.." என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.