திடீரென பற்றி எரிந்த தீ.. உழைத்த களைப்பில் பிஎம்டிசி பஸ்சில் தூங்கிய கண்டக்டர் கருகி பலி.. சோகம்
டிரைவர் பஸ் நிறுத்தத்தின் ஓய்வறையில் தூங்கிய நிலையில் கண்டக்டர் முத்தையா மட்டும் பிஎம்டிசி பஸ்சில் படுத்து தூங்கினார்.
பெங்களூர்: பெங்களூரில் இரவில் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பிஎம்டிசி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் உழைத்த களைப்பில் அதில் படுத்து தூங்கிய கண்டக்டர் உடல் கருதி பலியான துயர சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் பஸ் நிறுத்த ஓய்வறையில் தூங்கியதால் அவர் உயிர் பிழைத்தார்.
கர்நாடகா தலைநகரான பெங்களூரு மற்றும் புறநகர் பகுதிகளுக்காக பிஎம்டிசி எனும் பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூர், பெங்களூர் புறநகர், ராமநகர் வரை மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சாதாரண பஸ்கள், வால்வோ பஸ்கள், ஏசி பஸ்கள் என பல்வேறு வசதிகளுடன் கொண்ட பஸ்களை இந்த போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது.

பாகல்கோட்டையை சேர்ந்தவர்
இந்த பிஎம்டிசி போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தவர் முத்தையா (வயது 43). இவர் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவி மஞ்சுளா மற்றும் 14 வயதில் மகள் உள்ளார். இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் முத்தையா நேற்று டிரைவர் பிரகாசுடன் பணி செய்தார்.

பஸ்சில் தூங்கிய கண்டக்டர்
நேற்று இரவு பணி முடிந்தவுடன் பஸ்சை லிங்கதீரனஹள்ளி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் இரவு 10.30 மணிக்கு பார்க் செய்தனர். அதன்பிறகு டிரைவர் பிரகாஷ் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஓய்வறைக்கு சென்று படுத்தார். உழைத்த களைப்பில் முத்தையா பஸ்சிலேயே தூங்கினார்.

தீப்பிடித்து எரிந்த பஸ்
இந்நிலையில், அதிகாலை 4.30 மணியளில் திடீரென்று பிஎம்டிசி பஸ் தீப்பற்றி எரிந்தது. அப்போது டிரைவர் பிரகாஷ் கண்விழித்த நிலையில் பஸ் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் ஓடிவந்து பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர்.

உடல் கருகி பஸ்
ஆனால் அதற்குள் பஸ்சில் படுத்து தூங்கிய கண்டக்டர் முத்தையா சாமி உடல் கருகி இறந்தார். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றிய புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications