இதையுமா திருடுவாங்க? இரவோடு இரவாக மிஸ்ஸான பஸ் ஸ்டாப்! மதிப்பு எவ்வளவு தெரியுமா? பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: பெங்களூரின் மையப்பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பஸ் ஸ்டாப் திடீரென மாயமாகி உள்ளது. இரவோடு இரவாக யாரோ அதனை திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு, கிணற்றை காணவில்லை என போலீசில் புகார் செய்வார். வட்ட கிணறு சார். வற்றாத கிணறு சார் என அவர் போலீசிடம் கூறி புகாரளிக்கும் காட்சிகள் பலருக்கும் பேவரைட் காமெடியாக உள்ளது.

அதுபோல் இந்தியாவில் சில இடங்களில் போலீசில் வித்தியாசமான புகார்கள் செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதுபோல் தான் பெங்களூரில் பஸ் ஸ்டாப்பை காணவில்லை என தற்போது அளிக்கப்பட்டுள்ள புகார் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது பெங்களூர் நகரின் மையப்பகுதியில் முக்கிய இடமாக கன்னிங்காம் ரோடு உள்ளது. இந்த ரோட்டை சுற்றி பெரிய பெரிய நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ளன. இதனால் கன்னிங்காம் ரோட்டை பகல் மற்றும் இரவு நேரத்தில் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றன. வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும்.
இங்கு பிஎம்டிசி எனும் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்க மக்கள் காத்திருக்கும் வகையில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூர் நகரை பொறுத்தமட்டில் பிஎம்டிசி நிர்வாகத்துடன் தனியார் நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் இணைந்து பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்தும் நடைமுறை அமலில் உள்ளது.
அந்த வகையில் தான் கன்னிங்காம் ரோட்டில் சமீபத்தில் புதிதாக பஸ் நிறுத்தம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. ஸ்டீல் கம்பிகள் உதவியுடன் இந்த பஸ் நிறுத்தம் ரூ.10 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அடுத்த ஒரு வாரத்தில் அந்த பஸ் நிறுத்தம் மொத்தமாக மாயமாகி உள்ளது. இரவோடு இரவாக யாரோ பஸ் நிறுத்தத்தை மொத்தமாக திருடி சென்றுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பஸ் நிறுத்தம் இன்றி தவித்து வருகின்றனர். இதற்கிடையே பஸ் நிறுத்தத்தை அமைத்து கொடுத்த நிறுவனத்தின் ரவி ரெட்டி சார்பில் பெங்களூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து பிஎம்டிசி சார்பில் கூறுகையில், ‛‛பெங்களூர் நகரில் பஸ் ஸ்டாப்கள் விதிகளை மீறி அமைக்கப்பட்டால் அதனை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்றும். தற்போதும் அவர்கள் அகற்றி இருக்கலாம். இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை பொறுத்தமட்டில் பஸ் நிறுத்தங்கள் இரவோடு இரவாக மாயமாவது ஒன்றும் புதிது இல்லை. கடந்த மார்ச் மாதத்தில் எச்ஆர்பிஆர் பகுதியில் இருந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான பஸ் ஸ்டாப் திருடுப்போனது. அதற்கு முன்பாக 2015ல் தோப்பனஹள்ளி பஸ் பஸ் ஸ்டாப், 2014ல் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள பிஇஎம்எல் 2வது ஸ்டேஜ் பஸ் ஸ்டாப் உள்ளிட்டவை மாயமாகின.












Click it and Unblock the Notifications