7 சவரன் செயினுடன் விநாயகர் சிலையை கரைத்த தம்பதி! 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றி நகை மீட்பு!
பெங்களூர்: பெங்களூரில் விநாயகர் சிலைக்கு 4 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை அணிவித்திருந்த நிலையில் அதை மறந்த தம்பதி, அந்த விநாயகரை விஜர்சனம் செய்துவிட்ட நிலையில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு அந்த நகை மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள விஜயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா- உமாதேவி தம்பதி. இவர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து பூக்களால் அலங்காரம் செய்தனர்.

பிறகு 60 கிராம் எடை கொண்ட , சுமார் 7 பவுன் தங்க சங்கிலியை அந்த விநாயகருக்கு அணிவித்தனர். பிறகு பூஜைகளை முடித்துக் கொண்டு 3 நாட்கள் கழித்து பொதுவாக விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதற்காக பெங்களூருவில் செயற்கையாக குளம் உருவாக்கப்பட்டு அதில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராமையாவும் அவருடைய மனைவியும் தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த விநாயகர் சிலையை அந்த செயற்கை குளத்தில் போட்டு கரைத்துள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு சென்றதும்தான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த ரூ 4 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை சிலையிலிருந்து எடுக்காமல் அப்படியே குளத்தில் போட்டது தெரியவந்தது. இதையடுத்து பதறி அடித்துக் கொண்டு செயற்கை குளத்திற்கு வந்த தம்பதியினர் , அங்கிருந்த நிர்வாகிகளிடம் விஷயத்தை சொன்னார்கள்.
இது தொடர்பாக போலீஸாரிடமும் அந்த தொகுதி எம்எல்ஏ பிரியா கிருஷ்ணாவிடமும் புகார் கூறினர். இதையடுத்து ராமையா தம்பதியிடம், "நன்றாக நினைவிருக்கிறதா, இந்த குளத்தில்தான் உங்கள் செயினை தவறவிட்டீர்களா, இல்லை பிள்ளையார் சிலையிலிருந்து எடுத்து வீட்டில் எங்காவது தொலைத்துவிட்டீர்களா" என கேட்டார்.
மேலும் "இந்த நிகழ்வுக்காக தண்ணீரை வெளியேற்றிவிட்டுத்தான் தேட வேண்டும். அதனால் நினைவுப்படுத்திச் சொல்லுங்கள்" என்றார். ராமையா தம்பதியும் "நன்றாக நினைவிருக்கிறது, நாங்கள் விநாயகர் கழுத்தில் போட்ட நகையை எடுக்கவே இல்லை" என்றனர்.
இதையடுத்து தங்க நகையை தேடி கொடுக்குமாறு எம்எல்ஏ உத்தரவிட்டார். இதையடுத்து செயற்கை குளத்தில் தேடுதல் பணிகளில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர். விநாயகர் சிலையுடன் சங்கிலி இருந்ததை சிலையை கரைக்க கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் அது போலியானது என நினைத்து விட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து குளத்தில் இருந்த 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு 10 மணி நேரம் கழித்து தங்க சங்கிலி கிடைத்தது. இதையடுத்து அந்த நகையை தம்பதியிடம் கொடுத்து இதுவா என கேட்டு ஒப்படைக்கப்பட்டது. இதனால் தம்பதியினர், அங்கிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒப்பந்ததாரர் கூறுகையில் இந்த சங்கிலியை 10 பேர் தேடினார்கள். இந்த குளத்தில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. எனவே அந்த தொட்டியில் ஏராளமான களிமண் இருந்தது. காலை, செயினை கண்டெடுத்ததும் தம்பதிக்கு சொல்லி அனுப்பினோம். அவர்கள் வந்து செயினை பெற்றுக் கொண்டனர். இவ்வாறு அந்த ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications