மொத்தமாக ஸ்தம்பித்த பெங்களூர்.. 30+ மிமீ கொட்டிய கனமழை.. பல இடங்களில் டிராபிக் பாதிப்பு! மக்கள் அவதி
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் பெங்களூரில் பல முக்கிய இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இதனால் டிராபிக் பாதிப்பும் கூட பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. திடீரென கொட்டி தீர்த்த இந்த கனமழையால் பெங்களூர்வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்த மே மாதம் வித்தியாசமாக மழை கொட்டி வருகிறது. இதனால் பெரியளவில் வெப்பம் இல்லாமலேயே இருந்தது. அதேபோல கர்நாடக மாநில பெங்களூரிலும் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. நேற்றிரவு 8.30 மணி வரை மட்டும் பெங்களூரில் 28.8 மி.மீ கனமழை பெய்தது. அதற்கு மேலும் இரவு மழை கொட்டி வந்த நிலையில், மொத்தமாக பெய்த மழையின் அளவு 30 மிமீஐ தாண்டி இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

பெங்களூர் கனமழை
இந்த கனமழையால் பெங்களூரில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. மேலும் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. டானரி சாலையில் உள்ள என்.சி. காலனி மற்றும் ஹோரமாவு வார்டில் உள்ள சாய் லேஅவுட் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இவை தாழ்வான பகுதிகள்.. சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
பெங்களூர்வாசிகள் அவதி
ஜெயநகரில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஜீப் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கனமழையால் நகரின் பல முக்கிய பகுதிகளில் மிக மோசமான டிராபிக் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்குச் சாய் லேஅவுட்டில் வசிக்கும் நபர்கள் கூறுகையில், "இந்த பகுதியில் உள்ள சுமார் 250 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனது வீடு தரை தளத்தில் உள்ளது. கனமழையால் எனது வீட்டில் நீர் புகுந்துவிட்டது. இப்போது எனது வீட்டில் இரண்டு அடி உயரத்திற்குத் தண்ணீர் இருக்கிறது.
கடந்த ஆண்டும் இதேபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் அப்போது நான் வேறு ஒரு வீட்டை ரூ.25,000க்கு வாடகைக்கு எடுக்க வேண்டி இருந்தது. இப்போது மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற சிக்கல் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. ஆனால், இதற்குத் தீர்வு காண யாரும் முயலவில்லை" என்றார்.
டிராபிக் பாதிப்பு
கனமழையால் பெங்களூர் சாலைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாலகெரேவைச் சேர்ந்த ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த நிலையில், அது பனத்தூர் எஸ் கிராஸ் அருகே 2 அடி தண்ணீரில் சிக்கிக் கொண்டதாகவும், தனது தந்தையின் உதவியுடன் காரை தள்ளியே வெளியே எடுக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கனமழையைத் தொடர்ந்து பெங்களூர் மாநகராட்சி தலைமை ஆணையர் மகேஸ்வர் ராவ் உடனடியாக பெங்களூர் நகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தார். பெங்களூர் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவும், வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றவும், போக்குவரத்து போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மோசமான பாதிப்பு
கனமழையால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். மவுண்ட் காணாமல் பள்ளி சாலையை நோக்கிய கிழக்கு முனை சாலை, ஒரு மரம் விழுந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டது. டோம்லூர் மேம்பாலத்தின் ஒரு பாதை மற்றும் கோரமங்கலாவில் உள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கின. மான்யதா டெக் பார்க் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications