ஒரு சொட்டு மழை இல்லை... வரலாறு காணாத வெப்பம் வேற.. பெங்களூர்வாசிகளை கதற விட்ட மார்ச்! அட பாவமே
பெங்களூர்: பெங்களூரில் கடந்த மார்ச் மாதம் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. இது மட்டுமின்றி வெப்பமும் அங்கே உச்சத்தில் இருக்கிறது. இதனால் பெங்களூர்வாசிகள் என்ன செய்வதென்றே புரியாமல் திணறி வருகிறார்கள்.
பெங்களூரில் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்குச் சொந்தமாக நான்கு கண்காணிப்பு நிலையங்கள் இருக்கும் நிலையில், அந்த 4 மையங்களிலும் மார்ச் மாதம் எந்த மழையும் பதிவாகவில்லை. பெங்களூரில் மார்ச் மாதம் எப்போதும் மழை பெய்யும். ஆனால், இந்தாண்டு துளி கூட மழை பெய்யவில்லை.

பெங்களூர் மழை: அங்கே இதுவரை இல்லாத வகையில் வறட்சியும் தண்ணீர் நெருக்கடியும் நிலவும் நிலையில், அதற்கு மழை இல்லாததும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய வானிலை மைய தகவல்படி வழக்கமாக மார்ச் மாதத்தில் 14.7 மிமீ மழை இருக்கும். அதேபோல இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் பகுதியில் 11.2 மிமீ இருக்கும். ஆனால், இந்தாண்டு மழை சுத்தமாக இல்லை.
மார்ச் மாதம் என்று எடுத்துக் கொண்டால் 1981இல் தான் பெங்களூரில் அதிக மழை பெய்து இருந்தது. அந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் 101.2 மிமீ மழை பெய்து இருந்தது. இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் விமான நிலைய பகுதியைப் பொறுத்தவரைக் கடந்த மார்ச் 2008இல் 219.9 மிமீ மழை பெய்தது. இப்படிக் கடந்த காலங்களிலும் அங்கே கணிசமான மழை பெய்து இருக்கிறது.
வறண்ட மழை: இருப்பினும், இந்தாண்டு மார்ச் மாதம் மிகவும் வறண்ட ஒரு மாதமாக இருந்துள்ளது. தென் உள் கர்நாடகாவில் உள்ள 16 கண்காணிப்பு நிலையங்களில் மழை எதுவும் பதிவாகவில்லை. மிகவும் லேசான மழை என்று சொல்லும் அளவுக்குக் கூட மழை எங்கும் இல்லை என்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஒரு பக்கம் மழை இல்லாத நிலையில், இந்தாண்டு தான் பெங்களூரில் அதிகபட்ச வெப்பமும் பதிவானது. பெங்களூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பம் 36.6 டிகிரி செல்சியஸை தொட்டது. இது 2019 மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான வெப்பமான நாள் ஆகும்..
அதிகபட்ச வெப்பம்: வழக்கமான நாட்களிலும் கூட பெங்களூரில் அதிகபட்ச வெப்பம் என்பது இயல்பை விட 2.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே இருந்துள்ளது. நகரின் பல்வேறு இடங்களிலும் வெப்பம் இயல்பை விட 1.2 டிகிசி செல்சியஸ் முதல் 2.4 டிகிரி செல்சியல் வரை அதிகமாகவே இருந்துள்ளது.. பெங்களூர் நகரின் சராசரி அதிகபட்ச வெப்பம் 35.7 டிகிரி செல்சியஸாகவும் இந்துஸ்தான் ஏநோநாடிக்ஸ் விமான நிலையத்தின் சராசரி வெப்பம் 35.1 டிகிரி செல்சியஸாகவும் இருக்கிறது.
வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து பெங்களூரில்ல் உள்ள வானிலை மைய இயக்குநர் பிரசாத் கூறுகையில், "அடுத்த இரண்டு வாரங்களில் அதிகபட்ச வெப்பம் 35-36 டிகிரி செல்சியஸாக இருக்கும். ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குப் பிறகு லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, வட உள் கர்நாடக மாவட்டங்கள் - பாகல்கோட், விஜயபுரா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்" என்றார்.
ஏற்கனவே மார்ச் மாதம் மிகக் கடுமையான நீர் பஞ்சம், அதீத வெப்பம் என பெங்களூர்வாசிகளை படாய் படுத்திவிட்ட நிலையில், ஏப்ரல் கோடை மழையாவது தங்களைக் காப்பாற்றும் என்பதே பெங்களூர் வாசிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications