Bangalore: ரூ. 60 லட்சம் கொடுத்தும் போதவில்லை! வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி ஐடி ஊழியர் தற்கொலை
பெங்களூரு: வரதட்சணைக் கொடுமையால் ஐடி ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 50 லட்சம் வரதட்சணை கொடுத்தும், கணவர் கூடுதல் பணம் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தின் பின்னணி
கர்நாடகா மாநிலம், பெங்களூரு சுத்தகுண்டேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா(27). இருவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது ஷில்பா மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.
திருமணத்தின்போது பிரவீனுக்கு வரதட்சிணையாக ரூ. 50 லட்சம் கொடுக்கப்பட்டது. திருமணமான ஓராண்டில் பிரவீன் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு, பானிபூரி கடை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தொழில் தொடங்க கூடுதல் பணம் வாங்கி வருமாறு பிரவீன் அடிக்கடி ஷில்பாவிடம் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, ஷில்பாவின் குடும்பத்தினர் ரூ. 10 லட்சத்தை பிரவீனுக்கு கொடுத்தனர். ஆனாலும், கூடுதல் பணம் கேட்டு பிரவீனும் அவரது குடும்பத்தினரும் ஷில்பாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இதனால், பிரவீனுடன் வாழ மறுத்து, ஷில்பா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
சில காலம் கழித்து, பிரவீனின் குடும்பத்தினர் ஷில்பாவை சமாதானப்படுத்தி மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனாலும், வரதட்சணைக் கொடுமை தொடர்ந்துள்ளது.
தற்கொலை மற்றும் வழக்கு:
இந்த வரதட்சணைக் கொடுமையால் மனமுடைந்த ஷில்பா, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், ஷில்பாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பிரவீன், அவரது தாய் சாந்தா, தங்கை பிரியா ஆகிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பிரவீனை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர்.
தற்கொலை தடுப்பு உதவி எண்கள்:
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் வந்தால், தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
- தமிழக அரசின் ஹெல்ப்லைன்: 104
- சினேகா தொண்டு நிறுவனத்தின் ஹெல்ப்லைன்: 044 - 24640060












Click it and Unblock the Notifications