ஹலால் தடையா? கோயில் பலியாடுகளைகூட முஸ்லிம்கள் தானே சுத்தம் செய்கின்றனர் - கர்நாடக காங்கிரஸ் தலைவர்
பெங்களூரு: கபாலம்மா கோயிலில் பலியிடப்படும் ஆயிரக்கணக்கான ஆடுகளையும் முஸ்லிம்களே சுத்தம் செய்யும் சூழலில் ஹலால் பிரச்சனையை எழுப்புவதன் நோக்கம் என்ன? என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடரும் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அம்மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடுத்தடுத்த பிரச்சனைகளை இந்துத்துவ அமைப்புகள் கையில் எடுத்துள்ளனர்.
கோயில் திருவிழாவில் இஸ்லாமிய வியாபாரிகள் கடை நடத்தக்கூடாது என இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹலால் சர்ச்சை
இதன் தொடர்ச்சியாக மசூதிகளில் தொழுகைக்கு அழைக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒலிபெருக்கிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்துத்துவ அமைப்புகள் குரல் எழுப்பின. அதைத் தொடர்ந்து இஸ்லாமிய கறிக்கடைகளில் ஹலால் கறிகளை இந்துக்கள் வாங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த பஜ்ரங்தள் அமைப்பினர், சில கடைகள் மற்றும் வியாபாரிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த பாஜக
இந்த நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், "ஊழல் மிகுந்த பாஜக ஆட்சியை ஏன் கொண்டு வந்தோம் என கர்நாடக மக்கள் தங்களையே சபிக்கின்றனர். பாஜக ஒருபோதும் மக்களிடம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வரவில்லை. பின்வாசல் வழியாகவே ஆட்சியை பாஜக பிடித்துள்ளது.

கோயிலை தவிர அனைத்திலும் கமிஷன்
ஊழலுக்கு முக்கிய காரணம் இதுதான். 30 முதல் 40 சதவீதம் வரை எல்லாவற்றிலும் பாரதிய ஜனதா அரசு கமிஷன் வசூலிக்கின்றது. மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பாஜக அரசால் கர்நாடகாவுக்கு கரும்புள்ளி விழுந்துள்ளது. கோயில்களை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் மாநில அரசு கமிஷன் வாங்குகிறது." என்றார்.

நஷ்டத்தில் ஏழை இறைச்சி வியாபாரிகள்
கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அவர், "இறைச்சி வியாபாரம் செய்து வந்த மக்கள் பாஜகவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடுமையான நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனர். கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் முன்பு ஒரு ஆடு ரூ,8,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஒரு ஆட்டின் விலை வெறும் ரூ.3,000 - ரூ.4,000 வரை மட்டுமே உள்ளது.

இது ஒன்றும் உத்தரப்பிரதேசம் அல்ல
பாஜக தலைவர்கள் ஆடுகளை வாங்குகின்றார்களா?பெங்களூருவில் உள்ள கபாலம்மா கோயிலில் ஆயிரக்கணக்கான ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றனர். அவற்றை சுத்தம் செய்வது முஸ்லிம்கள்தான். இதுதான் உண்மையான நிலை. இப்படி இருக்கும்போது ஹலால் பிரச்சனைகளை கிளப்புவதன் நோக்கம்தான் என்ன? கர்நாடக மக்கள் தற்போது மிகவும் விழிப்போடு இருந்து வருகின்றனர். கர்நாடகா ஒன்றும் உத்தரப்பிரதேச கிடையாது. புல்டோசரை கொண்டு கட்டிடங்களை இடித்து தள்ளுவதற்கு." என்றார்.












Click it and Unblock the Notifications