பெங்களூரில் கள்ளக்காதலனுக்காக காதலியின் ரிஸ்க்..வேலை செய்த வீட்டில் இறுதியில் மறக்க முடியாத பரிசு
பெங்களூர்: பெங்களூருவில் கள்ளக்காதலனின் கடனை அடைக்க வேலை செய்த வீட்டில் நகைகளைத் திருடிய பெண் போலீசாரிடம் சிக்கியது குறித்து ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. வீட்டில் ஆள் இல்லாதபோது தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்த ஜோடிக்கு கடனால் சிக்கல் வந்துள்ளது. அதுவும் கள்ளக்காதலன் வாங்கி வைத்த கடனை அடைக்க, தான் வேலை செய்யும் வீட்டிலேயே சமயோஜிதமாக பிளான் போட்டு திருடி உள்ளார். ஆனாலும் போலீசாரின் தீவிர விசாரணையின் காரணமாக சிக்கி உள்ளார்.
பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் 38 வயதாகும் பிரமிளா என்பவர் வசித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். பிரமிளாவிற்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் பொம்மனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்திருக்கிறார்.

அங்கு பிரமிளாவிற்கும், அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் சுதாகர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுதாகருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதலில் நண்பர்களாகப் பழகிய இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.
மேலும் இவர்கள் இருவரும் வெளியில் சென்றும், வீட்டில் ஆள் இல்லாதபோது தனிமையில் சந்தித்தும் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்களாம். இந்த நிலையில் பிரமிளா அந்த தொழிற்சாலையில் வேலையை நிறுத்திவிட்டு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில், வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த சங்கராந்தி பண்டிகையின்போது சுதாகர் தனது கடனை அடைக்க பிரமிளாவிடம் பணம் கேட்டிருக்கிறார். இதற்காக பிரமிளா தான் வேலை செய்யும் வீட்டில் இருந்து உரிமையாளரின் நகைகளைத் திருடி விற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த பணத்தைத் தனது காதலனான சுதாகரிடம் கடனை அடைக்கக் கொடுத்தாராம்.
அதேநேரம் பிரமிளா தங்க நகைகளைத் திருடியது உடனடியாக வீட்டு உரிமையாளருக்குத் தெரியவில்லை. சமீபத்தில் அவர் பீரோவில் இருந்த நகைகளைச் சரி பார்த்து இருக்கிறார். அப்போது தான் சுமார் 4.5 லட்சம் மதிப்புள்ள 34 கிராம் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர், உடனடியாக இதுகுறித்து ஹெண்ணூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு வேலைக்காரப் பெண்ணான பிரமிளாவைப் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். இதில் பிரமிளா நகைகளைத் திருடி விற்பனை செய்ததும், அதனைத் தனது கள்ளக்காதலனான சுதாகரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரமிளாவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் சுதாகரை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications