பெங்களூரில் இளைஞரை விரட்டி சென்று கொன்ற கும்பல்.. நொடியில் நடந்த கொடூரம்! பதற வைக்கும் சம்பவம்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் சினிமாவில் வருவதைப் போல நடந்த ஒரு மோசமான படுகொலை சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக வருகிறது.
பெங்களூரில் பகிரங்கமாக நடந்த ஒரு கொலையின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் சினிமாவில் வருவதைப் போலவே ஒருவர் உயிருக்குப் பயந்து ஓட, ஸ்கார்பியோ கார் ஒன்று அவர் மீது ஓடுகிறது.

இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம், பெங்களூரின் புலகேசி நகர்ப் பகுதியில் நடந்துள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
படுகொலை: இந்தக் கொலை சம்பவத்தில் அம்ரீன் என்பவர் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளார். பண தகராறு காரணமாக இந்த கொலையைச் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அந்த நபர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சினிமாவில் வருவதைப் போல தட்டுத்தடுமாறி ஓடுகிறார். அப்போது பின்னாலேயே வரும் ஸ்கார்பியோ கார் அவரை துரத்துகிறது. அந்த நபர் காரில் இருந்து தப்ப சாலையில் இங்கும் அங்கும் ஓடுகிறார். இருப்பினும், அவரை விடாமல் துரத்தும் அந்த ஸ்கார்பியோ கார் அவரை திட்டமிட்டு முட்டி தூக்குகிறது. இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் பீதியைத் தருவதாகவே இருக்கிறது.
என்ன நடந்தது: முதலில் இந்த வீடியோ வெளியாகாத நிலையில், இதை விபத்து சம்பவம் என்றே நினைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே வீடியோ வெளியான பிறகே இது கொலை சம்பவம் என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் அஸ்கர் என்று அடையாளம் காணப்பட்டது. அஸ்கரின் நண்பரின் அளித்த வாக்குமூலமே இந்தக் கொலையைச் செய்தது யார் என்பதைக் கண்டறிய உதவியது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அம்ரீன் உட்பட 3 பேர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
கொலை செய்யப்பட்ட அஸ்கர் ஒரு செகண்ட் ஹேண்ட் கார் டீலர். அவர் அம்ரீனுக்கு கார் ஒன்றை விற்றுள்ளார். இருப்பினும், அம்ரீன் அதற்கு ரூ.4 லட்சம் பணத்தைத் தரவில்லை. அஸ்கர் தனது காருக்கான பணத்தை அமீரனிடம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் சண்டையாக மாறியது. இது தொடர்பாக ஏற்கனவே ஜேசி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம்: தன் மீதான புகாரைத் திரும்பப் பெறுமாறு அம்ரீன் அஸ்கரிடம் கேட்டுள்ளார். இருப்பினும் அதற்கு அஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். கொலை நடந்த அன்று இரவு, அஸ்கரை பேச்சுவார்த்தை அழைப்பது போல அம்ரீன் அழைத்துள்ளார். அப்போது அம்ரீன் உட்பட மூன்று பேர் திட்டம் போட்டு அஸ்கர் மீது காரை மோதி கொலை செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையை ஆரம்பித்த போது, மூன்று பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இருப்பினும், போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அவர்கள் மூன்று பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications