மூழ்கியது பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை.. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்.. அதிர வைக்கும் காட்சிகள்
பெங்களூர்: கர்நாடகாவில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக பெங்களூர் - மைசூரை இணைக்கும் நெடுஞ்சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த நெடுஞ்சாலையில் பல கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும், ஆந்திரா மற்றும் கேரளா கடற்பகுதிகளின் மேற்பரப்பில் சூறாவளி உருவாகியுள்ளதாலும் கர்நாடகாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெங்களூர் நகர், பெங்களூர் புறநகர், உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, கோலார், சிக்மகளூர், ஷிமோகா, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.

சாலையை மூழ்கடித்த வெள்ளம்
இந்நிலையில், பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மட்டுமல்லாமல் அதையொட்டி சர்வீஸ் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பல்கோடு, பிடாடி, ராம்நகர், சென்னபட்ணா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இதனால் அந்தப் பகுதியை கடந்து வாகனங்கள் செல்ல முடியாததால் பல கி.மீ. தொலைவுக்கு பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பல இடங்களில் வாகனங்களை வேறு பாதைகளுக்கு திருப்பிவிடும் நடவடிக்கையில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர் - ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பிவிடப்படுகின்றன. மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கியிருப்பதால், பல வாகனங்களால் திருப்பிவிடப்படும் பாதைக்கு செல்ல முடியவில்லை. மணிக்கணக்கில் வாகனங்கள் நெடுஞ்சாலையில் ஊர்ந்து செல்வதால் உணவு, குடிநீர் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் இன்னலை சந்தித்து வருதவாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் வெள்ள நீர் அதிகரித்து வருகிறது. முறையாக கழிவுநீர் செல்லும் வசதிகள் அமைக்கப்படாததே சாலையில் வெள்ளம் ஏற்பட காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், புதிதாக போடப்பட்ட இந்த நெடுஞ்சாலையின் தரத்தை மழை வெளிப்படுத்திவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலை மழையில் மூழ்குவது புதிதல்ல. கடந்த மாதம் பெய்த மழையில் மட்டூர், மாண்டியா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்
இந்நிலையில், பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலையில் கழிவு நீர் பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், அதனால்தான் இந்த நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைப்பு (NHAI) விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், "பெங்களூர் - மைசூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகள் குறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரில் முறையிடுவேன். கர்நாடகாவில் நான் முதல்வராக இருந்த போது, இந்த நெடுஞ்சாலைப் பணியை முடிந்தவரை விரைவுப்படுத்தினேன். ஆனால் தற்போது மத்திய அரசு தான் இதனை சரிசெ்யய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications