Bangalore: கண் முன்னே மகள்களை பறிகொடுத்த போலீஸ்காரர்.. சிறிய அலட்சியத்தால் பெங்களூரில் துயரம்! ஷாக் சிசிடிவி
பெங்களூர்: பெங்களூரில் (Bangalore) காலையில் பால் பாக்கெட் வாங்குவதற்காக சென்ற போலீஸ்காரர் ஒருவர் தன் கண் முன்னே இரு மகள்களையும் பறி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தனியார் பள்ளி பஸ் டிரைவர் செய்த சிறிய அலட்சியத்தால் இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிர் பறிபோகியுள்ளது. இது குறித்து சிசிடிவி வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவி பதைபதைக்க வைக்கிறது.
கர்நாடக மாநிலம் யாதகிரியை சேர்ந்தவர் நாகனகவுடா. பெங்களூரில் ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 வயது மகள் வர்ஷாவுடன் ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தனிசந்திரா பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

பால் பாக்கெட் வாங்க சென்ற போலீஸ்காரர்
இவரது அண்ணனும் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே போலீஸ் குடியிருப்பில் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வருகிறார். நாகனகவுடாவின் அண்ணன் வெளியூருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் பால் பாக்கெட் வாங்குவதற்காக தனது அண்ணன் மகள், மற்றும் தன் மகளுடன் பைக்கில் சென்றார்.
குழந்தைகள் இருவரையும் ஸ்கூட்டரின் முன் பகுதியில் அமர வைத்து ஓட்டி சென்றுள்ளார். மத்திய வருவாய் லே-அவுட் பகுதியில் சென்றபோது தனியார் பள்ளி பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. வளைவு பகுதி என்பதால், பஸ் செல்வதற்காக வழிவிட்டு நாகனகவுடா நின்று கொண்டிருந்தார்.
வேகமாக வந்த பஸ்
அப்போது பள்ளி பேருந்து டிரைவர் வேகமாக வந்து திரும்பினார். மேலும் சாலையில் நின்று கொண்டிருந்த நாகனகவுடாவின் ஸ்கூட்டரை பார்க்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் வளைவில் திருப்பியபோது ஸ்கூட்டர் மீது இடித்து தள்ளியபடி சென்றது. அவர் கை காட்டி சொல்லியும் வேகமாக நிற்காமல் டிரைவர் பஸ்சை இயக்கி சென்றார்.
இதில் எதிர்பாராதவிதமாக குழந்தைகள் இருவரும் பஸ்சின் டயருக்கு அடியில் சிக்கினர். அவர்கள் மீது பஸ் ஏறி இறங்கியதில் குழைந்தகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகனகவுடாக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. தன் கண் முன்பே குழந்தைகள் இருவரும் துடிக்க துடிக்க உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத நாகனகவுடா இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
பஸ் டிரைவர் கைது
இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தனியார் பள்ளி பஸ் டிரைவர் அலட்சியமாகவும், அதிவேகமாகவும் பஸ்சை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஹெண்ணூர் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தனியார் பள்ளி பஸ் டிரைவர் மாரப்பாவை கைது செய்தனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்துள்ளது. கடைக்கு சென்று வருவதாக சொல்லி சென்றபோது போலீஸ்காரர் இரு மகள்களை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications