பெங்களூர் ஏர்போர்ட்டில் பரபரப்பு.. நூழிலையில் விபத்து தவிர்ப்பு! அதிர்ச்சியில் உறைந்த விமான பயணிகள்
பெங்களூர்: டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி ஓடுதளத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஏஐ2651 என்ற விமானம், இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு வந்தது. விமானம் தரையிறங்கும்போது டெயில்ஸ்டிரைக் ஆகியுள்ளது. அதாவது வால் பகுதி தரையில் பட்டது. எனினும், சாதுர்யமாக செயல்பட்ட விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம்
விமானம் தரையிறங்கி முடித்ததும் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தை உடனடியாக அங்கிருந்த தொழில் நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த நிகழ்வு காரணமாக பெங்களூரில் இருந்து டெல்லி புறப்படுவதாக இருந்த விமானம் ரத்து ஆனது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்து ஏர் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் எங்கள் குழுவினர் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.
பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளின் பாதுகாப்பே எங்களுக்கு முதன்மையானது" என்று கூறப்பட்டு இருந்தது. பெங்களூர் ஏர்போர்ட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
'கோ-அரவுண்ட்' நடைமுறை
டெயில் ஸ்டிரைக் ஆன ஏர் இந்தியா விமானம் ஏஐ2651 ஏர்பஸ் ஏ321 வகையை சேர்ந்தது. இது குறுகலான பாடி அமைப்பை கொண்டது. இந்த விமானம் தரையிறங்க வரும் போது, அகலமான பாடி அமைப்பை கொண்ட மற்றொரு விமானம் அப்போதுதான் டேக் ஆனதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட 'வேக் டர்புலன்ஸ்' (Wake Turbulence) காரணமாக ஏர்பஸ் A321 விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக 'கோ-அரவுண்ட்' (Go-around) நடைமுறையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அந்த கோ-அரவுண்ட்டின் விமானத்தின் வால் பகுதி தரையை தொட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வால் பெங்களூர் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோ அரவுண்ட் என்றால் என்ன?
'கோ-அரவுண்ட்' (Go-around) என்பது விமானப் போக்குவரத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் பாதுகாப்பான நடைமுறையாகும். இதில், விமானி தரையிறக்கும் முயற்சியை இடைநிறுத்தி, மீண்டும் புறப்படும் அளவுக்கு என்ஜின் சக்தியை அதிகரித்து, விமானத்தை ஓடுதளத்திலிருந்து மேலே உயர்த்திச் செலுத்துவார். அதன் பின்னர், விமானம் மீண்டும் தரையிறங்க முயற்சிக்கவோ அல்லது அருகிலுள்ள மாற்று விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்படவோ செய்யப்படும்.














Click it and Unblock the Notifications