பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் ஜாமர் கருவி! திக்குமுக்காடும் குடியிருப்புவாசிகள்!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறை சாலையில் ஜாமர் கருவிகள் வைக்கப்பட்டுள்ளதால் அந்த சிறையை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு இணையதளமும், போன் நெட்வொர்க்கும் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை எழுவதாக புகார் தெரிவிக்கிறார்கள்.
கர்நாடகா மாநிலத்தில் பரப்பன அக்ரஹார சிறைச் சாலை உள்ளது. இங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா உள்ளிட்டோர் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

பொதுவாக சிறைச்சாலைகளில் கைதிகளிடம் போன் பயன்பாட்டையும் போதை பொருள் புழக்கத்தையும் தடுக்க ஒவ்வொரு முறையும் அவர்களது அறைகளும் உடைமைகளும் சோதனைக்குள்படுத்தப்படும்.
ஆயினும் ஏதாவது ஒரு வகையில் சிறைச்சாலைக்குள் செல்போன்கள் கைதிகளுக்கு கிடைத்துவிடுகின்றன. இதை வைத்தே சிறையிலிருந்தபடியே கைதிகள் சதி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளிடம் போன் பயன்பாடு அதிகரிப்பதை அறிந்த அதிகாரிகள் அங்கு போன்கள் இயங்காத வண்ணம் ஜாமர் கருவிகளை வைத்தனர்.
சிறைச்சாலையில் ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களிலும் ஜாமர் கருவிகளை அவர்கள் வைத்துள்ளனர். இதனால் கைதிகளிடம் போன் இருந்தாலும் அவர்களால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
கைதிகளுக்காக ஜாமர் கருவிகளை பரப்பன அக்ரஹார சிறை வளாகம் வைத்ததால் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கிறதாம். சிறையில் வைத்துள்ள பல்வேறு ஜாமர் டவர்களால் தங்கள் வீடுகளில் செல்போன் சிக்னலும் இன்டர்நெட் சிக்னலும் கிடைக்காத நிலை இருப்பதாக புகார் கூறுகிறார்கள்.
இதுகுறித்து பரப்பன அக்ரஹார சிறை அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருவோர் கூறுகையில், இந்த குடியிருப்புகளில் மாணவர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
சிறைச்சாலையில் ஜாமர் கருவி வைக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு போன் பேசுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தும் போது ஓடிபி வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. அவசரத்திற்கு ஒரு போன் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
ரவுட்டர் மூலம் வீடுகளுக்கு போன் கால் செய்து வருகிறோம். சிறையில் உள்ள ஜாமர் கருவிகளை நீக்குமாறு சிறைத் துறை டிஜிபிக்கு ஒரு மனு அளிக்க போகிறோம். அடுத்த சில நாட்களில் ஒரு போராட்டத்தையும் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
இது போல் மோசமான செல்போன் நெட்வொர்க்கால் ஆன்லைன் வகுப்புகளில் டியூஷன் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்த போது நெட்வொர்க் பிரச்சினையால் போன் செய்ய முடியாமல் அவர் இறந்துவிட்டார்.
திகார் சிறையில் கூட 400 ஏக்கருக்கு ஒரு ஜாமர் கருவியைத்தான் வைத்திருப்பார்கள். ஆனால் பெங்களூர் மத்திய சிறைக்கு மட்டும் எதற்காக பல ஜாமர்கள் என குடியிருப்புவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications