அடுத்த லெவலுக்கு போன மோசடிகள்.. இந்த மாதிரி ஃபோன் கால் வந்தால் உஷாரா இருங்க பாஸ்!
பெங்களூர்: பெங்களூரில் போன் அழைப்புகள் மூலம் பணத்தை இழந்ததாக அடுத்தடுத்து இருவர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டதாக ஒரு பக்கம் மார் தட்டி கொண்டாலும் அதன் மூலம் ஆபத்தும் இருப்பதை ஏற்கத்தான் வேண்டும். செல்போன் மூலம் உலகத்தையே உள்ளங்கையில் வைத்துக் கொள்ளலாம்.

உணவு வேண்டுமா ஆர்டர் செய்து கொள்ளலாம், மருந்து அதையும் ஆர்டர் செய்யலாம். உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே வீட்டு உபயோக பொருட்கள், கட்டில் மெத்தை, சோபா, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை கூட ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைக்கலாம்.
அது போல் யாருக்கேனும் பணம் வேண்டுமானால் போன் மூலம் டிரான்ஸ்பர் செய்யலாம், எங்கோ இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு பணம் வேண்டுமானாலும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இப்படி நமக்கு எளிதான விஷயங்கள் ஏமாற்றுக்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் மாறிவிட்டது.
போனில் வரும் ஓடிபி நம்பர் தெரிந்தால் போதும் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு அக்கவுண்டில் இருந்து வேறு அக்கவுண்டிற்கு பணத்தை செலுத்தலாம். அப்படிப்பட்ட போன் மூலம் நிறைய ஏமாற்றுச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் பெங்களூரில் இரு சம்பவங்கள் குறித்து புகார்கள் எழுந்தன.
கிழக்கு பெங்களூரில் கடுகோடியை சேர்ந்தவர் ஹர்ஷவர்தா. இவருக்கு கடந்த ஜூன் 22 ஆம் தேதி மர்ம நபரிடம் இருந்து போன் வந்தது. அதை அட்டன் செய்த ஹர்ஷவர்தாவுக்கு ஒரு ரெக்கார்டடு வாய்ஸ் கால் கேட்டது. அதில் உங்கள் வங்கிக் கணக்கை வேறு ஒருவர் பயன்படுத்தி வருகிறார் என கூறியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹர்ஷவர்தாவை உங்கள் எண்ணுக்கு வந்துள்ள ஓடிபியை உங்கள் போனில் இருந்தபடியே டைப் செய்யுங்கள் என சொல்லியுள்ளது. அவரும் அதே போல் செயதுள்ளார். பின்னர் அந்த வாய்ஸ் விரைவில் உங்கள் அக்கவுண்ட்டை வேறு நபர் பயன்படுத்தாத வகையில் பிளாக் செய்வதாக தெரிவித்துள்ளது.
ஹர்ஷவர்தாவும் நிம்மதி பெருமூச்சு விட்டார். இதையடுத்து அடுத்த நாள் அவர் தூங்கி எழுந்து மொபைலை பார்த்த போது அதில் ரூ 5 ஆயிரத்தை அவருடைய Mobikwik வாலட் மூலம் எடுத்ததாக 12 மெசேஜ் வந்தது. இதனால் 60 ஆயிரம் பணத்தை அவர் இழந்தார். உடனே Mobikwik வாலட்டுக்கு 60 ஆயிரம் பணம் டெபிட் ஆனது குறித்தும் அந்த பணத்தை தான் எடுக்கவில்லை என்பது குறித்தும் ஈமெயிலில் புகாராக தெரிவித்தார்.
போலீஸில் புகார் கொடுத்துவிட்டு எஃப்ஐஆர் நகலை இணைத்து ஈமெயில் அனுப்புமாறும் கேட்டுக் கொண்டனர். அப்போதுதான் தான் அந்த வாய்ஸ் கால் மூலம் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஹர்ஷவர்தா கூறுகையில் மோசடி போன்கால்கள், மெசேஜ்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பேன். ஆனால் இந்த முறை எனக்கு வந்த கால் ரெக்கார்டட் வாய்ஸ் என்பதால் ஏமாந்துவிட்டேன் என்றார்.
மற்றொரு சம்பவம்: கண்ணமங்கலாவை சேர்ந்த 60 வயது நபருக்கு போலி மெசேஜ் மற்றும் போன் கால் மூலம் ரூ 53, 545 ஐ இழந்துள்ளார். பெஸ்காம் என்ற பெயரில் 60 வயது முதியவருக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் மின்சார கட்டணம் கட்டவில்லை. அதனால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வந்துள்ளது.
இதனால் அந்த நபர் பதறிய நிலையில் அதில் சில கேள்விகளும் இருந்துள்ளன. அவற்றுக்கு ஒவ்வொன்றுக்கும் விடையை அளித்துக் கொண்டே இருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் 53,545 ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்டுவிட்டது. இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளை நம்ப வேண்டாம் என பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் சிலர் ஏமாறத்தான் செய்கிறார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications