"வக்கிரம்".. பெங்களூர் ஓட்டலில் குளித்த பெண்.. செல்போனில் வீடியோ எடுத்த தமிழக இளைஞர்.. கைது
பெங்களூர்: பெங்களூரில் ஓட்டல் அறையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை தனது செல்போனில் வீடியோ எடுத்த தமிழக இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
முதலில் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் வீடியோ எடுக்கவில்லை என கூறிய அவர், பிறகு அதை ஒப்புக் கொண்டார்.
பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுவது ஒருபுறம் இருக்க, இதுபோன்ற வக்கிரங்களும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது..
துபாய் ஓட்டல் “சீக்ரெட்”.. அண்ணாமலை பதில் சொல்வார்! பாஜகவின் புதிய “லீக்”.. குமுறும் காயத்ரி ரகுராம்
அதிகரிக்கும் வக்கிரங்கள்
சமீபகாலமாக, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. சிறு குழந்தை என்று கூட பாராமல் அவர்களை சீரழிக்கும் மனித மிருகங்கள் இன்னும் நம் மத்தியில் உலாவிக் கொண்டிருப்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. பாலியல் குற்றங்கள் நடைபெறுவது ஒருபுறம் என்றால், பெண்கள் மீதான வக்கிரங்களும் மறுபுறம் அதிகரித்துள்ளன. இன்றைக்கு அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டதால், ஆபாசப் படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவே, ஆண்களுக்கு பெண்கள் மீதான வக்கிர எண்ணங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியொரு வக்கிர சம்பவம்தான் பெங்களூரில் நடந்துள்ளது.
மகாராஷ்ட்ரா பெண்
மகாராஷ்ட்ரா மாநிலம் உஸ்மானாபாத் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், எம்ராய்டரி வகுப்பில் கலந்து கொள்வதற்காக பெங்களூரின் கலசிபாளையா பகுதிக்கு வந்துள்ளார். தனது கணவருடன் வந்த அவர், அங்குள்ள ஜே.சி. சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த சனிக்கிழமை தங்கியுள்ளார். அங்கு தங்கியிருந்தபடியே அவர் எம்ராய்டரி வகுப்புக்கு சென்று வந்தார்.
குளிக்கும் போது வீடியோ
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் வகுப்புக்கு செல்வதற்காக அந்தப் பெண் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வென்டிலேஷன் ஜன்னலில் அடிக்கடி ஒரு நிழல் போன்ற உருவம் வந்து மறைவதை அந்தப் பெண் பார்த்துள்ளார். பின்னர், அந்த ஜன்னலின் கண்ணாடியை அவர் மெதுவாக தூக்கி பார்த்த போது, பக்கத்து அறை பாத்ரூமில் இருந்து ஒரு கை மட்டும் செல்போனில் வீடியோ பிடித்தபடி இருந்துள்ளது. இதை பார்த்து அப்பெண் பயத்தில் அலறியுள்ளார். மேலும், நடந்த விஷயத்தை தனது கணவரிடமும் அவர் கூறினார்.
தமிழக இளைஞர்
இதையடுத்து, அவரது கணவர் பக்கத்து அறைக்கு சென்று கதவை வெளிப்புறமாக பூட்டினார். பின்னர் ஓட்டல் நிர்வாகம் மூலமாக கலசிபாளையா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், அங்கு வந்த போலீஸார் அந்த அறையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு 4 தமிழக இளைஞர்கள் இருந்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கிருந்த அனைவரும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, போலீஸார் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியதில், முத்துக்குமார் என்பவர்தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரது செல்போனை சோதனை செய்த போது, அந்த வீடியோவை அவர் டெலிட் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸார் அவரை கைது செய்தனர்.