பெங்களூரில் "வாடகைக்கு காதலன்".. ஒரு நாளைக்கு கட்டணம் வெறும் ரூ.389 தான்.. அப்படியே திகைத்த மக்கள்
பெங்களூர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் காதலர் தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.. காதலர்கள் தங்கள் பிரியமானவர்களுக்கு பரிசுப்பொருட்களை தந்து மகிழ்ந்தனர்.. ஆனால், பெங்களூருவில் பல இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
காதலர் தினம் என்பது, அதீத அன்பையும், அளவுகடந்த பாசத்தையும் கொண்டாடப்படுவதற்காகவே ஒதுக்கப்பட்ட ஒரு நாளாகும்.. இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்வார்கள்.

காதலர்கள் மட்டுமல்லாமல், ஏராளமானோர் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.. அதனால்தான் இதற்கு அன்பர்கள் நாள் என்றும் பெயர்.
அன்பர்கள் நாள்
ஆரம்பத்தில், மேற்கத்திய உலகக்கொண்டாட்டமாக இருந்தாலும், சமீபகாலமாகவே இந்தியாவிலும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் தற்போதுள்ள இளைய தலைமுறையினர் இந்த கொண்டாட்டத்துக்காகவே வருடம் முழுக்க காத்திருக்கிறார்கள்.
அந்தவகையில், இன்று சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காதலர் தினம் களைகட்டியது.. இந்த தினத்தையொட்டி, காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.. சில முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கோலாகல கொண்டாட்டம்
சென்னையை போலவே, பெங்களூருவிலும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது. இந்த கொண்டாட்டத்துக்கு நடுவில் பெங்களூருவின் பல இடங்களில் காதலனை, ஒரு நாள் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என போஸ்டர்கள் பலரையும் கடுப்பாக்கிவிட்டது.
அந்த போஸ்டரில், ஒரு நாளைக்கு ரூ.389 என்ற கட்டணத்தில் காதலனை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்" என்று அச்சிடப்பட்டுள்ளது. பெங்களூருவின் ஜெயாநகர் பானா ஷங்கரி மற்றும் பிடிஏ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
இப்படியா கொச்சைப்படுத்துவது
அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து தங்களது செல்போனில் போட்டோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.. நகரின் கலாச்சாரத்திற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, "காதல் என்பது ஒரு அப்பழுக்கற்ற சொல்.. எத்தனையோ பேர் காதலுக்காக தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள்.. அப்படியிருக்கும்போது, "வாடகைக்கு காதலன்" என்ற ரீதியில் கொச்சைப்படுத்துவதா? இப்படியொரு போஸ்டரை அச்சடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நெட்டிசன்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications