பலாத்காரம் செய்ய முயன்ற டீன் ஏஜ் இளைஞர்.. மறுத்ததால் பெங்களூரில் 34 வயது பெண் ஐடி ஊழியர் படுகொலை
பெங்களூர்: கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் 34 வயதான ஐடி பெண் ஊழியரைப் பக்கத்து வீட்டில் வசிக்கும் 18 வயது இளைஞர் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். பாலியல் அத்துமீறலை அந்தப் பெண் எதிர்த்ததால் அந்த இளைஞர் கொலை செய்துள்ளான். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் கர்நாடகாவில் நடந்தது.

34 வயது பெண் படுகொலை
கடந்த வாரம் கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் வீடு ஒன்றில் ஐடி ஊழியர் ஷர்மிளா டிகே என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். 34 வயதான இவரது மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஷர்மிளா பாலியல் அத்துமீறலை எதிர்த்ததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் 18 வயது இளைஞரால் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
கடந்த ஜனவரி 3ஆம் தேதி அவரது உடல் மீட்கப்பட்டது. ராமமூர்த்தி நகர் சுப்ரமண்யா லே-அவுட்டில் வசித்து வந்த ஷர்மிளா தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். ஷர்மிளாவின் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்றே போலீசார் முதலில் கருதினர். அந்தக் கோணத்திலேயே விசாரணையையும் தொடங்கினர். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 194(3)(iv)ன் கீழ் அசாதாரண மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது..
போலீசார் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் விசாரணையை நடத்தினர். அதில் பக்கத்து வீட்டில் வசித்த கர்னல் குரை என்பவரே இந்த கொலையைச் செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கர்னல் குரையிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவரும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
என்ன நடந்தது
அதாவது கடந்த ஜனவரி 3ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில், ஷர்மிளா வீட்டிற்குள் அந்த இளைஞர் அத்துமீறி நுழைந்துள்ளார். பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ளவே அவன் இதுபோல அத்துமீறி நுழைந்ததாக போலீசாரிடம் தெரிவித்தான். இருப்பினும், இதற்கு அந்தப் பெண் எதிர்த்தபோது, வலுக்கட்டாயமாக வாயையும் மூக்கையும் அடைத்துள்ளான். இதனால் ஆக்சிஜன் குறைந்த நிலையில், அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார். மேலும், இந்த சண்டையில் அப்பெண்ணுக்கு வேறு சில காயங்களும் ஏற்பட்டு லேசாக ரத்தம் வந்துள்ளது.
ஆதாரங்கள் அழிப்பு
இதனால் பயந்து போன அந்த இளைஞர் ஆதாரங்களை அழிக்க முடிவு செய்துள்ளான். இதனால் அந்த பெண்ணின் ஆடைகள் உள்ளிட்ட குற்றத்தின்போது பயன்படுத்தப்பட்ட எல்லா பொருட்களையும் மெத்தையில் போட்டு தீ வைத்துள்ளான். பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் கூறுகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்டவரின் செல்போனையும் திருடிச் சென்றுள்ளான்.
சந்தேகத்தின் அடிப்படையிலேயே அந்த இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 103(1) (கொலை), 64(2), 66 மற்றும் 238 (ஆதாரங்களை அழித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications