மொத்தமாக ஸ்தம்பித்த பெங்களூர்.. வெறும் 30 கிமீ தூரத்தை கடக்க 4 மணி நேரம்.. நெட்டிசன்கள் ஆதங்கம்
பெங்களூர்: பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஜெயநகர், ஜே.பி.நகர், பன்னரகட்டா, ஓசூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. 30 கிமீ தூரமுள்ள வொயிட்பீல்டில் இருந்து யலஹங்கா செல்ல நேற்று நான்கு மணி நேரம் ஆனது என நெட்டிசன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. யலஹங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி வீடுகளுக்குள் கீழ் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில இடங்களில்
6 அடி உயரம் வரை மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் முழுமையாக மூழ்கின. அங்கு தவித்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். அதேபோல் மகாதேவபுராவில் உள்ள சாய் லே-அவுட்டிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. அதேபோல் பல பகுதிகளில் கனமழையால் தேங்கி நின்றது,

இப்படியான சூழலில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக சாந்திநகர், ஜெயநகர், ஜே.பி.நகர், பன்னரகட்டா, வில்சன் கார்டன், நிமான்ஸ், பேகூர், பொம்மனஹள்ளி, பனசங்கரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஜெயநகர், ஜே.பி.நகர், பன்னரகட்டா, ஓசூர் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. குறிப்பாக எல்க்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்கள் இரவு முழுக்க சாலைகளிலேயே சிக்கி தவித்தனர். வெறும் 2 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 50 நிமிடங்கள் வரை ஆனது. வொயிட்பீல்டில் இருந்து பெங்களூரின் பிற பகுதிகளுக்கு சென்ற மக்கள், எப்படியாவது வீட்டிற்கு போனால் போதும் சாமி என்று பரிதவித்து போனார்கள்..
இதுபற்றி பெங்களூர் நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகிறார்கள்.. அந்த வகையில் சுதீப் நம்பியார் என்பவர் வெளியிட்ட பதிவில், நேற்று மாலை 5.30 மணியளவில் வைட்ஃபீல்டில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணியளவில் யலஹங்காவில் உள்ள வீட்டிற்கு போய் சேர்ந்தேன். மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 30 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 4 மணிநேரம் ஆகிவிட்டது. இதே தூரத்தை நேற்று முன்தினம் கடக்க 3.50 மணி நேரம் ஆனது. கடந்த வாரம் 3 மணி நேரம் 15 நிமிடம் ஆனது. ஆறு மாதங்களுக்கு முன்பு, அது 1 மணி 45 நிமிடங்கள் ஆக இருந்தது. ஒவ்வொரு நாளும் எனது சாதனைகளே நானே முறியடித்து வருகிறேன்.. இது எப்போது முடியும் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆவருக்கு வீட்டை வொயிட்பீல்டுக்கு மாற்றுப்படி கூறினார்கள். சிலர் வீட்டில் இருந்தே வேலை செய்யலாமே என்று ஆலோசனை கூறினார்கள். இதற்கு பதில் அளித்த அந்த நெட்டிசன், எனக்கு பலரும் ஆலோசனை கொடுத்தீங்க.. ஆனால் WFH என்பது ஒரு ஆடம்பரம், இது அனைவருக்கும் எளிதில் கிடைக்காது. சிலர் 5 நாட்களும் ஆபிஸ் போக வேண்டும். அப்படித்தான் எனக்குமே உள்ளது. வொயிட்ஃபீல்டுக்கு மாறக் கேட்பவர்களுக்கு - நான் எனது சொந்த வீட்டில் வசிக்கிறேன்.. அடிக்கடி வீடு மாறுவது எளிதல்ல. அதேபோல் வேலையை மாறுமாறு சிலர் சொல்கிறது. அப்படி வேலையைவிடுவது எளிது. ஆனால் மறுபடியும் எப்படி வேலைக்கு சேர்வது? என ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications