தொட்டு வருடி பேசி சிக்கிய அமைச்சர் விஸ்வநாதன்.. உளவுத்துறை 2 வீடியோ ஆதாரம்! கிரிஸ் சோடங்கர் ஆக்ஷன்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள சூழலில், ஒரு புது சர்ச்சை குபீரென கிளம்பி டெல்லி மேலிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு எதிராக, அக்கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்தே புகார்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளனவாம்.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்த காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்தது.

தவெக அமைச்சரவை
இதில், ராஜேஸ்குமார், விஸ்வநாதன், தாரகை கத்பர்ட், பிரவீன் மற்றும் ஜமால் முகமது யூனுஸ் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.. தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்ததை அடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 2 பேருக்கும் அமைச்சர் பதவிகளை வழங்கினார் முதல்வர் ஜோசப் விஜய்.
இதில் விஸ்வநாதனுக்கு அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வித் துறை ஒதுக்கப்பட்டது. ஆனால், பதவிக்கு வந்த சில நாட்களிலேயே அவர் சர்ச்சை வளையத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
குத்தாட்டம் போட்ட அமைச்சர்
சமீபத்தில் தவெக தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையிலுள்ள மேலூர் அரசு ஆண்கள் பள்ளியில் தவெகவினர் பிரம்மாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் விஸ்வநாதன், தவெக பெண் நிர்வாகி ஒருவருடன் இணைந்து மேடையில் போட்ட குத்தாட்டம் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக வைரலானது.
ஒரு பொறுப்புள்ள உயர் பதவியில் இருக்கும் அமைச்சர், அரசுப் பள்ளி வளாகத்தில் இப்படி நாகரீகமற்று நடந்துகொண்டது தமிழக அரசியல் களத்தைக் கடந்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத்தின் பார்வைக்கும் சென்றுள்ளது.. இந்த வீடியோவைப் பார்த்த ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்து, முகம் சுளித்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவியை தொட்டு வருடி
இந்த சர்ச்சை அடங்குவதற்குள், அதே மேலூர் விழாவில் நடந்த மாரத்தான் போட்டியின்போது எடுக்கப்பட்ட இன்னொரு வீடியோவும் வெளியாகி ஏகப்பட்ட அதிர்ச்சியை தந்துவிட்டது.
போட்டியில் பங்கேற்ற மாணவி ஒருவரின் 2 கால்களையும் வருடிய அமைச்சர் விஸ்வநாதன், அந்த மாணவியின் முகத்திற்கு அருகே சென்று கிசுகிசு குரலில் பேசியுள்ளார். இந்த முதிர்ச்சியற்ற, அருவருக்கத்தக்க செயல்பாடு உளவுத்துறையினரால் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு, அதன் முழு விவரங்களும் முதல்வர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதாம்.
இந்த வீடியோ ஆதாரங்கள், இப்போது தவெக அரசின் நற்பெயருக்கும், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய மாண்புக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள முதல்வர் விஜய்யும் இந்த விவகாரத்தில் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
அதிருப்தியில் காங்கிரஸ்
"காங்கிரசின் மாண்பையும் அரசியல் நாகரீகத்தையும் இவர் கெடுத்துக்கொண்டிருக்கிறாரே? பொறுப்புள்ள அமைச்சர் செய்கிற வேலையா இது? விஸ்வநாதனின் வீடியோவைப் பார்த்து மக்கள் முகம் சுளிக்கிறார்கள். முதல்வர் விஜய்யும் கூட அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதனால் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் நாகரீகத்தைக் கெடுத்துள்ள விஸ்வநாதனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
பொறுப்பிலிருந்து தவறுபவர்களுக்கு இப்படிப்பட்ட தண்டனை கொடுப்பது காங்கிரசில் உள்ள மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். அதனால், விஸ்வநாதனை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் புகார்கள் தமிழக காங்கிரஸிடமிருந்து டெல்லிக்கு பறந்து கொண்டிருக்கின்றனவாம்..
டெல்லிக்கு போன 2 வீடியோ
நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் அமைச்சர் விஸ்வநாதனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு, "முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதால் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், இனி இப்படி நடக்காது, மன்னித்துவிடுங்கள்" என்று விஸ்வநாதன் கெஞ்சியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனாலும் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் தங்களுக்கு வேண்டிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தரும் நோக்கில் டெல்லியில் தீவிர லாபியில் இறங்கியுள்ளனர்.
கட்சியின் பெயரைக் கெடுக்கும் நபர்கள் மீது தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தொண்டர்களுக்குப் புரிய வைக்க இதுவே சரியான தருணம் என்று காங்கிரஸ் எம்பிக்கள் அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.. இந்த உட்கட்சி மோதலும் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சுகளும் தவெக-காங்கிரஸ் கூட்டணியின் அரசியல் முதிர்ச்சியை தற்போதைய சூழலில் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications