ஆரத்தி எடுத்து வரவேற்பு.. ராமதாஸை சந்தித்து குடும்பத்துடன் வாழ்த்திய அன்புமணி! மோதல் முடிவு?
விழுப்புரம்: இரண்டரை ஆண்டுகளாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தந்தையின் திருமணநாளையொட்டி தைலாபுரத்திற்கு குடும்பத்துடன் வந்த அன்புமணி, தந்தை ராமதாஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அன்புமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்ததாகக் கூறப்பட்ட உள்கட்சி மற்றும் குடும்ப ரீதியிலான மோதல்கள் தற்போது முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தைலாபுரத் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாமகவில் ராமதாஸ் மற்றும அன்புமணி இடையில் அதிகார மோதல் வெடித்தது. இதனால் ராமதாஸ் தனி இயக்கம் தொடங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் ஆணைய விதிகளின்படி பாமக தலைவர் அன்புமணி என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பாமக அன்புமணி வசம் வந்தது. இந்த சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் நிறுத்திய வேட்பாளர்கள் யாரும் வெல்லவில்லை.
அதிமுக கூட்டணியில் இணைந்து அன்புமணி தரப்பு பாமக போட்டியிட்ட 17 தொகுதிகளில் 4ல் வென்றது. குறிப்பாக சவுமியா அன்புமணி வெற்றி பெற்று சட்டசபை சென்றார். இதனால் பாமகவினர் உற்சாகம் அடைந்தனர். இருப்பினும் ராமதாஸ் - அன்புமணி இணையாதது பாமக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராமதாஸ் - சரஸ்வதி அம்மையார் தம்பதியரின் திருமண நாளையொட்டி இந்த பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தனது மனைவி மற்றும் மகள்களுடன் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்குத் திடீரென வருகை தந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் வந்த அன்புமணிக்கு தைலாபுரத்தில் ஆரத்தி எடுத்து, திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின் ராமதாஸிடம் ஆசி பெற்ற அன்புமணி, திருமண நாளன்று வாழ்த்தி தெரிவித்தார். இதன்பின் இரு தரப்பிலும் நலம் விசாரித்து மனக்கசப்புகளை மறந்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலுக்கு பின் பாமகவை அன்புமணி வசம் கொடுத்துவிடுவேன் என்று ராமதாஸ் கூறி இருந்தார்.
தற்போது சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிவடைந்து ஒன்றரை மாதங்களாகிவிட்ட சூழலில், பாமக இணைப்பு சாத்தியமாகலாம் என்று பார்க்கப்படுகிறது. இந்த சட்டசபைத் தேர்தலில் பாமக தனது செல்வாக்கை தக்க வைத்து கொண்டுள்ள சூழலில், அவரை கூட்டணியில் சேர்க்க திமுகவும், கூட்டணியில் தக்க வைக்க அதிமுகவும் தீவிரமாக இருக்கின்றன.












Click it and Unblock the Notifications