ஒரே வாரத்தில் ₹29.4 லட்சம் கோடி காலி.. கதறும் எலான் மஸ்க்.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை
வாஷிங்டன்: உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே வாரத்தில் சுமார் 350 பில்லியன் டாலர் (சுமார் ₹29.4 லட்சம் கோடி) அளவுக்குச் சரிந்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே இதற்குக் காரணம். இது எப்படிச் சாத்தியமானது.. சில நாட்களில் பங்குகள் இந்த அளவுக்குச்சரிய என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் முக்கியமான தனியார் ஸ்பேஸ் ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது உலகின் முதல் டிரில்லியனர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றார். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பங்குச் சந்தை மாற்றங்களால் அவரது சொத்து மதிப்பில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெரிய நஷ்டம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை சரிந்துள்ளன. இதனால் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 2.9 டிரில்லியன் டாலரிலிருந்து (சுமார் ₹243.6 லட்சம் கோடி), தற்போது 2 டிரில்லியன் டாலராகக் (சுமார் ₹168 லட்சம் கோடி) குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சியால் எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 1.45 டிரில்லியன் டாலரிலிருந்து (சுமார் ₹121.8 லட்சம் கோடி) 1.1 டிரில்லியன் டாலருக்கும் (சுமார் ₹92.4 லட்சம் கோடி) கீழே குறைந்துள்ளது.
ரொம்பவே அதிகம்
எலான் மஸ்க்கிற்கு ஏற்பட்டுள்ள இந்த 350 பில்லியன் டாலர் (சுமார் ₹29.4 லட்சம் கோடி) இழப்பு என்பது, உலகின் இரண்டாவது மிகப் பணக்காரரான லாரி பேஜின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட அதிகமாகும். லாரி பேஜின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 299 பில்லியன் டாலர் (சுமார் ₹25.11 லட்சம் கோடி) ஆகும். அதாவது உலகின் 2வது பெரிய பணக்காரரின் சொத்தை விட அதிக சொத்து மதிப்பை எலான் மஸ்க் வெறும் சில நாட்களில் இழந்துள்ளார். குறிப்பாகக் கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பில் இருந்து 152 பில்லியன் டாலர் (சுமார் ₹12.76 லட்சம் கோடி) சரிந்தது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் மஸ்க்கிற்கு சுமார் 38 சதவீதப் பங்குகள் இருப்பதால், அந்நிறுவனத்தின் ஏற்ற இறக்கங்கள் எலான் மஸ்கின் சொத்து மதிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
என்ன காரணம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது AI திட்டங்களுக்காக குறைந்தபட்சம் 20 பில்லியன் டாலர் (சுமார் ₹1.68 லட்சம் கோடி) நிதி திரட்ட, புதிய முதலீட்டுப் பத்திரங்களை வெளியிடப் போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் சில சந்தேகங்களையும் கவலைகளையும் உருவாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய AI திட்டங்களுக்கான முதலீடுகள் நீண்ட காலத்திற்கு லாபகரமாக இருக்குமா என்ற தயக்கமே முதலீட்டாளர்களின் இந்த தயக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.
ஜூன் 16ம் தேதி உச்சத்தில் இருந்தபோது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களை முந்தி, சந்தை மதிப்பில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமாக உயர்ந்தது. ஆனால் தற்போதைய சரிவின் காரணமாக, இப்போது ஏழாவது இடத்திற்குச் சரிந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று மட்டும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் 16 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. பங்குச் சந்தைக்கு வந்த பிறகு அந்நிறுவனம் சந்தித்த மிக மோசமான ஒருநாள் சரிவு இதுவாகும். இருப்பினும், ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் இன்னும் ஐபிஓ விலையைக் காட்டிலும் அதிகமாகவே வர்த்தகம் செய்யப்படுகின்றன.
எல்லாமே சரிவு
ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி, உலக அளவில் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ சார்ந்த பங்குகளின் சரிவோடு ஒத்துப்போகிறது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் மற்றும் அமேசான் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததால், நாஸ்டாக் குறியீடு திங்கட்கிழமை 1.3 சதவீதம் வரை குறைந்தது. இச்சரிவின் தாக்கம் ஆசிய சந்தைகளிலும் பலமாக எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications