ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கல.. விஜயின் அரசு சூப்பர்.. பாராட்டித் தள்ளும் Zoho ஸ்ரீதர் வேம்பு!
Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு லஞ்சமின்றி விரைவாக தனது பள்ளிக்கு அனுமதி கிடைத்ததாக பாராட்டியுள்ளார். கிராமப்புற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் தனது பள்ளிக்கு முந்தைய ஆட்சி காலத்தில் லஞ்சம் கேட்டதாகவும், தற்போது அது மாறியுள்ளதாகவும் ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில், தென்காசி மாவட்டத்தில் தான் தங்கி பணியாற்றி வரும் பகுதியில் கோவிந்தபேரி கிராமத்தில் "கலைவாணி கல்வி மையம்" என்ற கிராமப்புற பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு முந்தைய ஆட்சி காலத்தில் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார். இலவசமாக இயங்கும் பள்ளிக்கு கூட குறிப்பிட்ட தொகை கேட்கப்பட்டதாகவும், அது மட்டுமே வழி என்று சொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, அனுமதிகள் விரைவாகவும், தானாகவும் கிடைத்ததாக அவர் பாராட்டினார். முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நல்ல மாற்றத்தை வரவேற்றார்.

அமைச்சர் புதிய உத்தரவு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன், கடந்த வாரம் தனியார் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் சான்றிதழ்களை எவ்வித லஞ்சமும் இன்றி ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு அமலுக்கு வந்த பிறகு, பலர் இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஸ்ரீதர் வேம்புவின் இந்த பாராட்டு, விஜய் தலைமையிலான அரசின் இந்த புதிய முயற்சி உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் இலவச கல்வி நிறுவனங்களுக்கு இது பெரும் உதவியாக அமையும்.
இது ஏன் முக்கியம்?
முந்தைய அரசு காலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெறுவதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளதாகவும், இது பல பள்ளி நிர்வாகிகளுக்கு பெரும் சுமையாக இருந்தது என புகார்கள் வந்தது.
இந்த நிலையில் தான் கடந்த வாரம் சென்னையில் நடந்த தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன், இனி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ் பெறுவதற்கு அரசியல் செல்வாக்கோ, பணப் பலமோ அல்ல... தகுதியே ஒரே அளவுகோல் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 848 தனியார் பள்ளிகளுக்கு புதிய அங்கீகாரக் கடிதங்களை ராஜ்மோகன் வழங்கினார்.
தனியார் பள்ளிகள் அங்கீகாரம் அல்லது புதுப்பித்தல் சான்றிதழ் பெறுவதற்காக யாருக்கும் ஒரு ரூபாய் கூட வழங்க வேண்டியதில்லை என்று அவர் கூறினார். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கல்வித் தரகர்கள் அல்லது வேறு யாரேனும் பணம் கேட்டு அணுகினாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார் ராஜ்மோகன்.
இனி முழுவதும் இணையவழி (Online) நடைமுறை
ஜூலை 1, 2026 முதல் தனியார் பள்ளிகளுக்கான அனைத்து அனுமதிச் செயல்பாடுகளும் முழுமையாக ஆன்லைன் மயமாக்கப்படுகின்றன. பள்ளிகளின் தொடர் அங்கீகாரம் (Recognition), ஆண்டு புதுப்பித்தல் (Renewal), மற்றும் தடையில்லாச் சான்று (NOC) ஆகிய அனைத்து விண்ணப்பங்களும் இணையவழியில் மட்டுமே ஏற்கப்படும். இதன் மூலம் கல்வித்துறை அதிகாரிகளின் நேரடித் தலையீடு முற்றிலுமாகக் குறைக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.












Click it and Unblock the Notifications