சட்டென மேடையிலிருந்து கீழே இறங்கிய விஜய்.. கூடவே ஓடிய அதிகாரிகள்! நிறைமாத கர்ப்பிணிக்கு சர்ப்ரைஸ்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 401 பேருக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார். குறிப்பாக நிறைமாத கர்ப்பிணியான அக்ஷையலட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, முதலமைச்சர் விஜய் மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று பணி ஆணையை வழங்கியிருக்கிறார்.
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி ஆணைகளை வழங்கியிருக்கிறார். இதன் மூலம் மின்வாரியம் புதுப்பொலிவு பெறும் என்றும், மின்வெட்டுப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

சீரியஸாக மாறும் மின்வெட்டு பிரச்சனை
தவெக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, எதிர்க்கட்சிகள் வைத்து வரும் மிகப்பெரிய விமர்சனம் மின்வெட்டுப் பிரச்சனைதான். இதற்கு முன்னர் சென்னையில் அடிக்கடி பவர் கட் இருக்காது. அப்படியே கட் ஆனாலும், அடுத்த 10வது நிமிடத்தில் கரண்ட் வந்துவிடும். புயல், வெள்ளம் காலங்களில்தான் மின்வெட்டு தீவிரமாக இருக்கும்.
மக்கள் போராட்டம்
ஆனால், தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து மின்வெட்டுப் பிரச்சனை தீவிரமாக மாறியிருக்கிறது. சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், தாம்பரத்தின் வெளிவட்ட பகுதிகளில் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக, மக்கள் ரோட்டில் இறங்கி போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
அடுக்கடுக்கான காரணங்கள்
என்னதான் காரணம் என்று விசாரித்தால், அடுக்கடுக்கான பிரச்சனை மின்வாரிய ஊழியர்கள் முன்வைக்கிறார்கள். முதல் பிரச்சனை போதுமான ஆட்கள் இல்லாதுதான். ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் உடனடியாக மின்வாரியத்திற்கு தேவைப்படுகிறார்கள். கடந்த ஆட்சியில் ஆட்கள் பற்றாக்குறை அப்படியே நிரப்பப்படாமல் இருந்திருக்கிறது. ஆட்கள் இல்லாததால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே இருந்திருக்கின்றன.
தவெக அரசு முயற்சி
அதேபோல தரமற்ற மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதும், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட மிக முக்கியமான காரணமாக இருக்கிறது என்று ஊழியர்கள் கூறுகின்றனர். இப்படி இருக்கையில்தான் பிரச்சனைகளைச் சரி செய்ய மின்வாரிய துறையில் காலிப்பணியிடங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று மின்வாரிய துறை அதிகாரிகளுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. விரைவில் மற்ற பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படியோ, கரண்ட் கட் ஆகாமல் இருந்தால் சரி என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications