ஹார்முஸை திற விலை குறையட்டும்.. அமெரிக்காவின் ஒற்றை அறிவிப்பு.. 4 மாதச் சரிவில் கச்சா எண்ணெய்
மத்திய கிழக்கில் பல வாரங்களாக நிலவிய பதற்றம் மெல்ல தணியத் தொடங்கியுள்ள நிலையில், உலக கச்சா எண்ணெய் சந்தையும் அமைதிப் பாதைக்கு திரும்பியுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் எண்ணெய் கப்பல்கள் செல்லத் தயாராகியிருக்கும் வேளையில், உலக நாடுகளில் எண்ணெய் சப்ளை சீரடையும் அறிகுறிகள் வெளியாகியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் விரைவில் மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனாலும் முதலீட்டு சந்தைக்கு விடிவுக் காலம் பிறக்கவில்லை என்பது முதலீட்டாளர்களின் பெரும் கவலையாக உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெரும் தாக்கம் நாட்டின் வளர்ச்சியில் இருக்காது என்ற அச்சம் உருவாகி வருகிறது.

கச்சா எண்ணெய் விலை
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 37 சென்ட் குறைந்து 76.71 டாலரில் வர்த்தகமானது. அமெரிக்க WTI கச்சா எண்ணெய் விலை 36 சென்ட் சரிந்து 72.85 டாலரில் இருந்தது. இரண்டு கச்சா எண்ணெய்யும் செவ்வாய்க்கிழமை 1% அளவுக்கு சரிந்து, மார்ச் மாத தொடக்கத்திலிருந்து இல்லாத அளவிலான குறைந்த விலையை எட்டி 4 மாத சரிவை பதிவு செய்துள்ளது.
அமெரிக்கா ஈரான் எண்ணெய் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் 60 நாட்கள் தடை விலக்கு கொடுத்துள்ளது. இதன் மூலம் சந்தையில் கூடுதல் எண்ணெய் வர உள்ளதால், சப்ளை மற்றும் தட்டுப்பாடுப் பிரச்சனை தீரும். மேலும் லெபனானில் பதற்றம் குறைந்துள்ளதும் விலை சரிவுக்கு காரணமாக அமைந்தது.
இதேவேளையில் ஓமன் மற்றும் ஈரான் இடையே ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் நிர்வாகம் குறித்து பேச்சுவார்த்தை தொடர ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் எண்ணெய் போக்குவரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் கச்சா எண்ணெய் 4 மாதச் சரிவுக்கு வர முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்தியாவுக்கு என்ன தாக்கம்?
கச்சா எண்ணெய் விலை குறைவதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. இது பொதுமக்களுக்கு நல்ல செய்தியாக அமையும். இருப்பினும், டாலரின் வலுவான நிலை தங்க விலை உயர்வுக்கு பெரும் சுமையாக உள்ளது.
பங்குச்சந்தையில் ஏஐ தொடர்பான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. ஏஐ முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால் முதலீட்டாளர்கள் முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த சந்தையும் மந்த நிலையில் உள்ளது.
உலக அளவில் பொருளாதார மந்தநிலை (Recession) வருமோ என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது. போர் முடிந்த பிறகும் முதலீட்டு சந்தைகள் முழுமையாக மீண்டு வராததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பினால், கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
போர் முடிந்தும் ஏன் சந்தைகள் மந்தம்?
மத்திய கிழக்கில் பதற்றம் குறைந்தாலும், உலக முதலீட்டு சந்தைகள் இன்னும் எச்சரிக்கை மனநிலையிலேயே உள்ளன. கச்சா எண்ணெய் சரிவு, ஏஐ துறையின் மதிப்பீட்டு அழுத்தம், டாலரின் வலிமை மற்றும் உலக பொருளாதார வளர்ச்சி குறித்த சந்தேகங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை காத்திருக்கும் நிலைக்கு தள்ளியுள்ளன.
இதனால், உலக நாடுகள் மந்தநிலையை நோக்கி நகருமோ என்ற அச்சமும் சந்தைகளில் அதிகரித்து வருகிறது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறையும் பட்சத்தில் இந்திய நுகர்வோருக்கு பெட்ரோல், டீசல் விலை மூலம் ஒரு முக்கிய நிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications