முதல்வர் விஜய் உட்பட 22 MLAகளுக்கு அழைப்பு.. 3 மாதங்களுக்கு பின் இன்று சென்னை மாநகராட்சி கூட்டம்!
சென்னை: கடந்த மூன்று மாதங்களாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள பிரதான கூட்ட அரங்கில் கூடுகிறது. சென்னை நகரின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நேற்றைய தினம் அது நிறைவடைந்தது. திங்கள்கிழமை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றி இருந்தனர்.

அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் முதல்வர் விஜய், தனது பதிலுரையை ஆற்றினார். சட்டசபை விவாதங்கள் காரசாரமாக நடந்தது. நேற்றோடு சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் கூடுகிறது.
இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மேயர் பிரியா மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு சட்டசபைத் தேர்தல் நடந்து, மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இப்போது மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மீண்டும் கூடுகிறது.
வழக்கமாக நடக்கும் கூட்டங்களைப் போலல்லாமல், இந்த முறை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னைக்கு உட்பட்ட முதல்வர் விஜய் உட்பட 22 எம்.எல்.ஏ-க்களும் இந்த மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வித சிரமமுமின்றி அமர்வதற்காக மாமன்றக் கூட்ட அரங்கில் பிரத்தியேகமாகத் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், சாலைச் சீரமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற மிக முக்கியமான திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், இதற்கு முன்பு மாமன்றம் கூடிய போது திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தது. ஆனால், இப்போது திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள காங்கிரஸ், தவெக உடன் கை கோர்த்துள்ளது. முன்பு சென்னை மாமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கு அருகே காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருந்த நிலையில், கூட்டணி மாற்றத்தைத் தொடர்ந்து எதிரில் அமர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications