ஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்
பெங்களூர்: பெங்களூரில், ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மஞ்சுநாத் என்பவர் மீது 70 வகையான போக்குவரத்து விதி மீறல் புகார் பதிவு செய்யப்பட்டு, 15 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடுவோர் மீது பல மடங்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுவது, அனைவரும் அறிந்ததே. சில நேரங்களில் வாகன மதிப்புக்கு ஈடாக அபராதத் தொகை சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் பெங்களூரில் சமீபத்தில் நடந்துள்ளது.

பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் இது குறித்த தகவலை புகைப்படத்துடன் இன்று வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.
காவல்துறையினர் கூறியது இதுதான்: கடந்த 12ஆம் தேதி ராஜாஜிநகர் டிராபிக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், மகாலட்சுமி லே-அவுட், சங்கர் நகர் பஸ் நிலையம் அருகே காவல்துறையினர் டிராபிக் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பயணித்த ஸ்கூட்டரில் பயணித்த மஞ்சுநாத் என்பவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தெரிய வந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் பயணித்தது, மூன்று பேர் ஒரே பைக்கில் பயணித்தது, பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ஹெல்மெட் அணியாதது, தவறான இடத்தில் பார்க்கிங் செய்தது, ஸ்டாப் கிராஸ் செய்தது, ஜீப்ரா கிராஸ் செய்தது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் அவர் ஈடுபட்டதை உறுதி செய்ததையடுத்து 70 வகையான விதி மீறல் புகார்கள் பதிவு செய்யப்பட்டது. இதற்கு அபராதமாக 15 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர். கவலை தோய்ந்த முகத்துடன் மஞ்சுநாத் நிற்பது போல இது தொடர்பான போட்டோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஒரு வாகன ஓட்டி இத்தனை வகையான விதிமீறல்களில் எப்படி ஈடுபட முடியும் என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications