நீங்க முஸ்லீமா.. அப்போ வீடு வாடகைக்கு இல்லை.. இது ஹைஃபா கதை! ஐடி தலைநகர் பெங்களூரில் இந்த நிலை!
பெங்களூரு: "எனது மதத்தை காரணமாக கூறி எனக்கு வீடு தர மறுக்கிறார்கள்" என முஸ்லிம் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Recommended Video
பொதுவாக, சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் பணம் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கி விடலாம். ஆனால் வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் சிரமம். அனுபவித்தவர்களுக்கு தான் இது புரியும்.

வீடு வாடகை அதிகம், வசதிகள் குறைவு உள்ளிட்வற்றை சமாளித்தாலும் வீட்டின் உரிமையாளர்கள் வைக்கும் நிபந்தனைகள் அதிகமாக இருக்கும். உறவினர்கள் வரக் கூடாது; அப்படியே வந்தாலும் இரு தினங்களுக்கு மேல் தங்கக் கூடாது; இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் மோட்டார் போட வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிப்பார்கள். இதற்கும் மேலாக, பல வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வீடு தேடி வருபவர்களிடம் எந்த ஜாதி, எந்த மதம் என வெளிப்படையாகவே கேட்பார்கள். அவர்களுக்கு அது ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே வாடகை வீடு கிடைக்கும்.

அந்த வகையில், பெங்களூருவைச் சேர்ந்த ஹைஃபா என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தான் வாடகை வீட்டை தேடி அலைந்த அனுபவத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும், வீட்டு உரிமையாளர்களிடம் நடந்த உரையாடல் தொடர்பான வாட்ஸ் அப் பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு வாட்ஸ் அப் பதிவில், ஹைஃபாவிடம் வீட்டின் உரிமையாளர் ஒருவர் பெயரை கேட்கிறார். அதற்கு அவர் 'ஹைஃபா' என பதிலளிக்கிறார். அதன் பின்னர் உரிமையாளர், 'நீங்கள் இந்து குடும்பமா?' எனக் கேட்கிறார். அதற்கு ஹைஃபா, 'இல்லை' என்கிறார். உடனடியாக உரிமையாளர், 'இந்து குடும்பத்தினருக்கு மட்டுமே வீடு தரப்படும்' என்கிறார்.
அதற்கு அடுத்த வாட்ஸ் அப் பதிவிலும், முஸ்லிம் என்ற காரணத்தால் ஹைஃபாவுக்கு உரிமையாளர்கள் வீடு தர மறுக்கும் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பதிவுகளுக்கு மேலே ஹைஃபா, "அனைவரும் நம் நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை கொண்டாடி இருப்பீர்கள். நான் ஆகஸ்ட் 15-ஐ எப்படி செலவிட்டேன் பாருங்கள்" என எழுதியுள்ளார். ஹைஃபாவின் இந்த பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அவருக்கு பலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மதத்தின் பெயரால் வீடு தர மறுக்கும் உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு சிலர் கமெண்ட் செய்துள்ளனர். சிலரோ, "வீடு அவர்களின் சொத்து. அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம்" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications