பெங்களூரில் தனியார் ஊழியர்களுக்கு சிக்கல்.. பிஜி - ஹாஸ்டல்களை மூடும் அதிகாரிகள்.. என்ன காரணம்?
பெங்களூர்: பெங்களூரில் பொது சுகாதாரம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டவிரோதமாக செயல்படும் பிஜி மற்றும் ஹாஸ்டல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கிழக்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ரெய்டை மகாதேவபுரா மற்றும் கேஆர்புரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதன்மூலம் விதிமீறி செயல்படும் பிஜி, ஹாஸ்டல்கள் மூடப்படுவதோடு, அதனை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் அங்கு தங்கி இருக்கும் ஊழியர்கள் பாதிக்கப்படலாம்.
பெங்களூரில் ஏராளமான முன்னணி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் வேலை தேடி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக பெங்களூர் செல்கின்றனர். அங்கே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இதில் திருமணம் ஆனவர்கள் என்றால் வீடு எடுத்து தங்கி விடுகின்றனர். ஆனால் திருமணம் ஆகாதவர்கள் என்றால் பிஜி மற்றும் ஹாஸ்டல்களில் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் பிஜி, ஹாஸ்டல்களில் தங்கி உள்ளனர்.
பெங்களூரை பொறுத்தவரை ஏராளமான பிஜி, ஹாஸ்டல்கள் உள்ளன. ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகளை சுற்றி அதிகளவில் பிஜி, ஹாஸ்டல்கள் உள்ளன. ஆனால் தற்போது பலரும் சட்டவிரோமதாக பிஜி, ஹாஸ்டல்களை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே வைத்து கொண்டு சுகாதாரத்தை பராமரிப்பு இல்லை எனவும் புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில் தான் பெங்களூர் கிழக்கு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பிஜி மற்றும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை கூடுதல் கமிஷனர் (வளர்ச்சி) லோகாண்டி ஸ்நேகல் சுதாகர் பிறப்பித்துள்ளார்.
இதற்கான தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக சுகாதார துறையை சேர்ந்தவர்கள் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மகாதேவபுரா பகுதியை எடுத்து கொண்டால் டாக்டர் ராகேஷ் தலைமையில் ஹூடி, ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளியில் இன்று முதல் 14ம் தேதி வரை சோதனை நடைபெற உள்ளது.
அதேபோல் கேஆர்புரம் என்றால் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் ஹாரமாவு, கேஆர்புரம், எச்சிஎல் உள்ளிட்ட இடங்களிலும் இன்று சோதனை தொடங்கி நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது சட்டவிரோதமாக செயல்படும் பிஜி மற்றும் ஹாஸ்டல்கள் மூடப்படுவதுடன் ஜிபிஏ சட்டப்பிரிவு 2024ன் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாகும். பெரும்பாலானவற்றில் தனியார் நிறுவன ஊழியர்கள் தான் அதிகம் தங்கி உள்ளனர். இதனால் இந்த நடவடிக்கை அவர்களை வேறு பிஜி, ஹாஸ்டல்களை தேடும் நிலைக்கு கொண்டு செல்லலாம்.












Click it and Unblock the Notifications