சித்தப்பாவா இவர்? திருமணத்துக்கு அப்பா காட்டிய பச்சை கொடி.. மறு விருந்துக்கு வந்த மகள்.. மறுநொடியே?
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்து வருகிறது.. பவித்ரா என்ற பெண், இளைஞர் ஒருவரை காதலிக்க போய், கடைசியில் இப்படியொரு துயரம் வந்து சேர்ந்துள்ளது.. இச்சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளையும் போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள்.. என்ன நடந்தது கர்நாடகாவில்?
கதக் மாவட்டத்தில் டவுன் பகுதியில் வசித்து வருபவர் கிரிசப்பா.. 47 வயதான இவர் ஒரு விவசாயி ஆவார்.. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்..

கர்நாடகா பவித்ரா
பவித்ரா தனது உறவுக்கார இளைஞன் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.. தனது திருமண ஆசையை தனது பெற்றோரிடம் பவித்ரா வெளிப்படையாகவும் சொன்னார்.
இந்த காதல் திருமணத்துக்கு பெற்றோர் எப்படியும் எதிர்ப்பு சொல்வார்கள் என்றுதான் பவித்ரா நினைத்தார்.. ஆனால், மகளின் ஆசையே மிக முக்கியம் என்று கருதிய கிரிசப்பா, லட்சுமி தம்பதியினர், அந்த காதலுக்கு முழு மனதுடன் பச்சைக்கொடி காட்டினார்கள்.. தங்களது சொந்தக்கார இளைஞருக்கே, தன்னுடைய மகளையும் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர்.
காதலுக்கு பச்சைக்கொடி
ஆனால், பவித்ராவின் இந்த காதலுக்கும், அந்த இளைஞருடன் திருமணம் செய்து வைப்பதற்கும் கிரிசப்பாவின் தம்பிகளான சிவகுமாரும், ஈரண்ணாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..
எனினும், ரத்த சொந்தங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, தனது மகளின் விருப்பப்படியே அவர் ஆசைப்பட்ட காதலனுக்கே கிரிசப்பா திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார்.. இந்த திருமணத்தில் தந்தை கிரிசப்பாவின் தம்பிகளான சிவகுமாரும் ஈரண்ணாவும் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்காமல் முழுமையாக புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது..
திருமணம் முடிந்த கையோடு பவித்ரா தனது கணவருடன் பிறந்த வீட்டிற்கு விருந்துக்காக வந்திருந்தார்.. தன்னுடைய அம்மா, தனது தம்பிகளின் வீட்டில் தங்கியிருப்பதால், அவரிடம் சென்று ஆசி பெற்று வருமாறு மகளையும் மருமகனையும் கிரிசப்பா அனுப்பி வைத்தார்..
சித்தப்பாக்கள்
பவித்ராவும் தனது பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக தனது சித்தப்பாக்களின் வீட்டிற்கு கணவரை அழைத்து கொண்டு சென்றார்.. ஆனால், பவித்ராவையும் அவரது கணவரையும் பார்த்த, சிவகுமாரும் ஈரண்ணாவும் தம்பதியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கிரிசப்பா, உடனடியாக தம்பிகளின் வீட்டிற்கு கிளம்பி சென்றார்..
மகளை ஏன் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று தனது தம்பிகளிடம் நியாயம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. ஏற்கனவே தங்கள் பேச்சை மீறி மகளுக்கு அந்த இளைஞருடன் காதல் திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் இருந்த தம்பிகள் இருவரும், உடன் பிறந்த அண்ணன் என்றும் பாராமல் உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் கிரிசப்பாவை சரமாரியாக தாக்க தொடங்கினர்..
மறு வீட்டுக்கு வந்த மகள்
இந்த கொடூர தாக்குதலில் கிரிசப்பாவின் கை எலும்பு முறிந்ததுடன், தலை மற்றும் மார்புப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.. இதை பார்த்து பதறிய அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு கதக் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கிரிசப்பா பரிதாபமாக உயிரிழந்தார்..
இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த கதக் டவுன் போலீசார், கிரிசப்பாவின் குடும்பத்தினர் அளித்த புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்தனர்.. அண்ணன் கிரிசப்பாவை கொலை செய்ததாக அவரது தம்பிகளான சிவகுமார், ஈரண்ணா மற்றும் அவர்களின் மனைவிகளான ரத்தினவ்வா, கீதா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் 4 பேருமே அப்போது தலைமறைவாக இருக்கிறார்களாம்.
அவர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.. மகளின் ஆசைக்காக தனது உயிரையே தியாகம் செய்த தந்தையின் இந்த கொடூர மரணம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..!!












Click it and Unblock the Notifications