பனீர் டிக்கா ரோலில் எட்டி பார்த்த வால்.. பெங்களூர் மக்களே உஷாரா இருங்க! பேக்கரி உணவுகள் ஜாக்கிரதை
பெங்களூர்: பேக்கரியை பார்த்தாலே எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொள்ளும். இப்படி ஆர்வத்தில் பேக்கரிக்கு போய், பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார் பெங்களூர் இளைஞர்.
பெங்களூர் மாகடி மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் தீபு (32) என்ற வாடகை கார் ஓட்டுநர், கடந்த ஏப்ரல் 25 அன்று மதியம் உணவை தவறவிட்டிருக்கிறார். மாலை 4 மணியளவில், பசி ஓவராகி கை, கால்கள் நடுக்கம் எடுத்திருக்கிறது. எனவே, பக்கத்தில் உள்ள ஒரு பேக்கரிக்குச் சென்று, முதலில் ஹனி கேக் சாப்பிட்டுவிட்டு, பின்னர் பனீர் டிக்கா ரோல் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஹனி கேக்
ஹனி கேக் கொடுத்த இன்பத்தில் மிதந்துக்கொண்டிருந்த தீபுக்கு, பனீர் டிக்கா ரோல் வடிவத்தில் ஷாக் வந்திருக்கிறது. டிக்காவை அப்படியே எடுத்து வாயில் அடக்கிய தீபு, இரண்டாவது முறையாக ரோலை கடிக்கும்போதுதான், அதில் பல்லி வால் இருந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஹனி கேக் உட்பட சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்திருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த ஊழியர் ஒருவர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரை 24 மணி நேரம் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தினர்.
பல்லியை சாப்பிட்ட தீபு
உங்க பேக்கரியில் வந்து சாப்பிட்டுதான் இப்படி ஆயிடுச்சு, அதனால ஹாஸ்பிடல் பில்லை நீங்கதான் கொடுக்கணும் என, தீபு கேட்க.. அதெல்லாம் முடியாது என்று பேக்கரி நிர்வாகம் மறுத்துள்ளது. மட்டுமல்லாது எங்களுக்கு தெரிந்த கிளினிக் ஒன்று இருக்கிறது, அதில் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ளலாம் வாங்க என்றும் அழைத்திருக்கிறது. தீபு அதை மறுத்துள்ளார்.
வழக்குப்பதிவு செய்த போலீஸ்
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக தீபு புகார் கொடுத்திருக்கிறார். கோவிந்தராஜா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களால் கவனக்குறைவாகச் செயல்படுதல் (BNS - Negligent conduct with respect to poisonous substance) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. தீபு அந்த உணவில் இருந்த பல்லியைப் புகைப்படம் எடுக்கவில்லை. பதற்றத்தில் வாந்தி எடுத்ததால் தன்னால் ஆதாரத்தைச் சேகரிக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பல்லியை சாப்பிட்டால் என்ன ஆகும்?
பல்லி ஒரு விஷத்தன்மை கொண்ட உயிரினம் என்று பரவலாக நம்பப்பட்டாலும், உண்மையில் பெரும்பாலான வீட்டுப் பல்லிகள் நேரடியாக விஷம் கொண்டவை அல்ல. இருப்பினும், அவை மறைமுகமாக கடுமையான உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும்.
பல்லிகளின் தோலிலும், அவற்றின் எச்சத்திலும் சால்மோனெல்லா (Salmonella) எனப்படும் பாக்டீரியாக்கள் அதிகளவில் வாழ்கின்றன. இதுதான் மிகப்பெரிய ஆபத்து. பல்லியைச் சாப்பிடும்போது அல்லது அது விழுந்த உணவை உட்கொள்ளும்போது இந்த பாக்டீரியா மனித உடலுக்குள் சென்று உணவு நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இதன் விளைவாகத் தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்படும்.
பெரும்பாலான நேரங்களில், உணவில் பல்லி இருந்ததை அறிந்தவுடன் ஏற்படும் அதிர்ச்சி மற்றும் பயத்தின் காரணமாகவே பலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுகிறது. இதனை 'Psychosomatic reaction' என்பார்கள்.












Click it and Unblock the Notifications